senthil balaji teased thambidurai
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அரசு சார்பில், மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது. இதற்கு போட்டியாக தினகரன் அணியினரும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்களை கொண்டாடுகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் வரும் 29ம் தேதி தினகரன் அணி சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தினகரன் கலந்துகொள்ளும் இந்த விழாவில், கரூர் மாவட்ட அதிமுக தொண்டர்களை திரட்டி மாஸ் காட்ட திட்டமிட்டுள்ளார் செந்தில் பாலாஜி.

ஆனால், இந்த நூற்றாண்டு விழாவிற்கு கரூர் மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதற்குக் காரணம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரைதான் காரணம் என கூறப்படுகிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே தம்பிதுரை மற்றும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஒரு அணியாகவும் செந்தில் பாலாஜி மற்றொரு அணியாகவும் செயல்பட்டு வந்தனர். செந்தில் பாலாஜியை ஒழித்து கட்டுவதற்காகவே, எம்.ஆர்.விஜயபாஸ்ரை அமைச்சராக்கியதோடு அவருக்கு கரூர் மாவட்ட செயலாளர் பதவியையும் வாங்கிக்கொடுத்தார் தம்பிதுரை.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டபோது, தம்பிதுரை மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பழனிசாமி அணியில் இருந்தனர். அதனால் செந்தில் பாலாஜி, தினகரன் பக்கம் தாவினார்.
இந்த நிலையில், தினகரன் அணி சார்பில் கரூரில் நடத்த இருக்கும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இந்த தகவலை அறிந்த செந்தில் பாலாஜி, சீப்பை எடுத்து ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று போய்விடுமா? கரூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடந்தால், தொண்டர்களை திரட்டி நாம் பலத்தை காட்டிவிடுவோம் என பயந்து தம்பிதுரை தடுக்க நினைக்கிறார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு போட்டு எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடத்தியே தீருவேன் என செந்தில் பாலாஜி ஆதரவாளர்களிடம் கூறியிருக்கிறார்.
