Senthil Balaji petition before bail
போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கில் இருந்து முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி, நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகர் தனபால்.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை மிரட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை பழனிச்சாமி எடுத்து வருகிறார். நாமக்கல் ஒப்பந்ததாரர் மர்ம மரண வழக்கில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவான பழனியப்பனுக்கு வலை வீசப்பட்டது.
தற்போது முன்னாள் அமைச்சரும் தினகரன் ஆதரவாளருமான செந்தில் பாலாஜி மீது அந்த வலை வீசப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.95 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக உள்ள வழக்கில் விசாரிப்பதற்காக தமிழக போலீசார் ஏவப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியைத் தேடி தமிழக போலீசார், எம்.எல்.ஏக்கள் தங்கியுள்ள ரெசார்ட்டிற்கு சென்றனர். ஆனால் அங்கு செந்தில் பாலாஜி இல்லை என கூறப்படுகிறது. ரெசார்ட்டை விட்டு தப்பிய செந்தில் பாலாஜியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
