மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா என்று விசாரிக்க வேண்டியிருக்கிறது. குமாரபாளையத்தில் ஆழக் குழிதோண்டி உள்ளே பதுங்கியிருக்கிறார் போலும். மின்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அல்லவா நடக்கிறது? 

இதயத்தில் துளி ஈரமும் இல்லாத, சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் மோசமான கொடூரர்களின் கைகளில் ஆட்சி சிக்கியிருக்கிறது என்று திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நூறு நாட்களைத் தாண்டிவிட்ட ஊரடங்கினால் சிறு, குறு, நடுத்தரத் தொழில் அத்தனையும் முடங்கிக் கிடக்கிறது. உள்ளூருக்குள் சிறு தொழில் நடத்தி நான்கைந்து பேர்களுக்கு வேலையும் கொடுத்து, தாமும் ஓரளவுக்குச் சம்பாதித்து கெளரவமாக வாழ்ந்தவர்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். எப்பொழுது விடியும் என்று தெரியாமல் கதறுகிறார்கள். ஊரடங்கு என்பதைத் தவிர எதுவுமே தெரியாத, அதையும்கூட ஒழுங்காகச் செயல்படுத்தத் தெரியாத மங்குனி அரசு நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கூட்டியதைத் தவிர என்ன சாதித்திருக்கிறது?
முடங்கிய தொழில்களுக்கு என்ன வழிவகைகளைச் செய்தார்கள்? சிறு குறு தொழில்களை நம்பியிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? ஆயிரம் ரூபாய் போதுமா ஒரு குடும்பத்துக்கு? யாருக்குமே வழி தெரியாத இருள் சூழ்ந்த காட்டில் அல்லவா நிறுத்தியிருக்கிறது இந்த அரசாங்கம்? உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமலாவது இருக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலையின் வரி ஏற்றி, ஓடாத நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் வசூலித்து என இருப்பதையெல்லாம் வழிப்பறி செய்து திணற அடிக்கிறார்கள். கழகத்தலைவர் ஜூன் 5ம் தேதியன்றே மின் கட்டணம் என்ற பாறாங்கல்லைத் தலையில் தூக்கி வைத்து- அடித்தட்டு, ஏழை எளிய, நடுத்தர மக்களை அடியோடு நசுக்கிக் கூத்தாடும் அதிமுக அரசைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அரசாங்கத்துக்குத்தான் சொல்புத்தியும் கிடையாது சுயபுத்தியும் கிடையாதே! எதைப்பற்றியாவது துளியாவது சிந்திக்கிறாரா முதலமைச்சர்? அவருக்கு என்ன சொகுசான வாழ்க்கை. சேலத்துக்கும்-சென்னைக்கும் வண்டி ஓட்ட டிரைவர், பாதுகாப்புக்கு போலீஸ், பெட்டியை நிரப்ப வசூல் என்று ‘விபரீத ராஜ வாழ்க்கை’ வாழும் முதல்வரும் அவரது சகாக்களும் மக்களைப் பற்றி எதையாவது நினைக்கிறார்களா?


மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியை யாராவது பார்த்தீர்களா என்று விசாரிக்க வேண்டியிருக்கிறது. குமாரபாளையத்தில் ஆழக் குழிதோண்டி உள்ளே பதுங்கியிருக்கிறார் போலும். மின்கட்டணம் என்ற பெயரில் பகல் கொள்ளை அல்லவா நடக்கிறது? எப்பொழுதும் இல்லாத அளவில் ஒவ்வொரு வீட்டிலும் மின்கட்டணம் வந்திருக்கிறது. எங்கள் மாவட்டமான கரூர் செல்லாணடிபாளையத்தில் ஒரு விவசாயிக்கு 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயை பில்லாக அனுப்பி வைத்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் வெறும் ஐம்பது ரூபாய் கட்டிய விவசாயி அவர். நூறு யூனிட் இலவச மின்சார அறிவிப்புக்குப் பிறகு மின் கட்டணமே கட்டாத விவசாயிக்கு லட்சத்தில் பில். இது ஒரு சோற்றுப்பதம்தான். மின்கட்டணம் செலுத்துகிற அத்தனை பேருமே ‘எப்பொழுதுமே இல்லாத அளவுக்கு பில்’ என்று கூக்குரல் போடுவது காதில் விழவில்லையா?


இதயத்தில் துளி ஈரமும் இல்லாத, சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கும் மோசமான கொடூரர்களின் கைகளில் ஆட்சி சிக்கியிருக்கிறது. அழுகிறவர்களுக்கும், வேதனைகளைப் பகிர்கிறவர்களுக்கும் ஒன்றே ஒன்றுதான் சொல்கிறேன். இன்னமும் பத்து மாதங்களில் தேர்தல் வரும். மக்களின் கவலையை யோசிக்காதவர்கள் மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்கள். அப்பொழுது அரிதாரம் பூசிக் கொண்டு சுற்றுகிறவர்களை சீந்த நாதி இருக்காது. திமுக தலைவர் தளபதி ஆட்சி மலரும். தமிழகம் துன்பங்களிலிருந்து விடுதலையாகி தலை நிமிரும். காத்திரு தமிழகமே!” என்று அறிக்கையில் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.