தூக்கில் இருந்து தப்பிய கொலையாளிகள் அதிர்ஷ்டசாலிகள்...! இத்தாலியில் முக்கிய குற்றவாளி இருப்பதாக சு.சுவாமி டுவிட்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தின்போது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர்.
வாழ்வின் பெரும்பகுதியை சிறையில் கழித்த நிலையில், கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் மனுவை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி, தமிழக அரசின் மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏழு பேரின் விடுதலை கோரிய மனுவை குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறித்து பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதை குடியரசு தலைவர் நேரடியாகவே தள்ளுபடி செய்து விட்டார். தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிர்ஷ்டசாலிகள். இத்தாலியில் முக்கிய குற்றவாளி வசித்து வருகிறார். அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.