தமிழகத்துக்கு மத்திய படைகளை அனுப்புங்கள்... திமுக அரசை தொடர்ந்து சீண்டும் சுப்ரமணியன் சுவாமி..!
தமிழகத்தில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப். படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைக்க வேண்டும் என்று திமுக அரசை பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சீண்டியுள்ளார்.
தமிழகத்தில் புதிதாக அமைந்த திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம்கூட நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி திமுக அரசை தொடர்ந்து விமர்சனம் செய்துவருகிறார். பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு சுப்ரமணிய சாமி கடிதம் எழுதி பரபரப்பூட்டினார்.
அடுத்ததாக பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து ட்விட்டரில் அவர் பதிவிட்டு வருகிறார். “பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில், தமிழக அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவது தெரியவந்தால், தமிழக அரசு கலைக்கப்படும்” என்று கருத்து தெரிவித்து அதிரடி காட்டிய சுவாமி, “தமிழகத்தில் புதிய ஆட்சி தொடங்கிய சில நாட்களிலேயே அது, ஜெர்மனியின் நாஜி ஆட்சியை நினைவுபடுத்துகிறது” என்று கூறி சாடினார். மேலும் தமிழக ஆளுநருக்கும் சுவாமி கடிதம் எழுதினார்.
இந்நிலையில், இன்று இன்னொரு ட்விட்டரை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார் சுவாமி. அதில், “2019-ஆம் ஆண்டுக்கு முந்தைய காஷ்மீர் வகை தேசிய எதிர்ப்பு எழுச்சியின் அச்சுறுத்தலில் இன்று தமிழகம் உள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் ரா அமைப்பு, உளவுத் துறைக்கு ஆவணங்களை வழங்க வேண்டும் . மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு பதில், மத்திய அரசு சி.ஆர்.பி.எஃப் மற்றும் பி.எஸ்.எஃப். மத்திய படைகளை மதுரைக்கு அருகிலுள்ள மூன்று மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று பதிவிட்டு திமுக அரசை அதிரடித்துள்ளார்.