ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 

ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்த போது கல்லூரிகள் மூடப்பட்டு முழுமையாக ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் நடைபெற்ற தேர்வுகளில் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் எதிர்கொண்டதால் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தேர்வுகளானது எழுத்துத்தேர்வாகவே நடத்த உத்தரவிடப்பட்டது. அதேவேளையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட மற்ற படிப்புகளில் தேர்வுகளானது ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வலியுறுத்தி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மதுரை காமராஜர் பல்கலை கழகம், அமெரிக்கன் கல்லூரி, யாதவர் கல்லூரி, மன்னர் திருமலை கல்லூரி, மதுரைக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியிலிருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது ஆன்லைன் தேர்வை நடத்தகோரி பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கை நிறைவேறும் வரை கலைந்து செல்லமாட்டோம் எனக்கூறி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழகத்தில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி நேரடியாக மட்டுமே நடைபெறும் என்று உயர்கல்வித்துறை அறிவித்தது. ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதை அடுத்து மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக மதுரையில் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற 150 கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து மேலும் 300 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனவரி 20 ஆம் தேதிக்கு பிறகு உயர்கல்வி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஆஃப்லைன் தேர்வுக்கு ஒரு மாதம் அவகாசம் கோரிய நிலையிர் 2 மாதம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். மேலும் ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடியின் அறிவிப்பை தொடர்ந்து ஆன்லைன் தேர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.