அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும். 

அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும் என அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் அவ்வப்போது அதிமுக பாஜகவுக்கு இடையே மோதல் போக்கு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் மதுரையில் பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ;- அண்ணாமலைக்கும் எங்களுக்கும் என்ன உள்ளது. அவர் பாஜக மாநில தலைவர் அவர் கட்சியினருக்காக அவர் பேசுகிறார். ஜஸ்ட் லைக். எங்களுக்கு தெரிந்ததெல்லாம் மோடி ஜி, நட்டா ஜி, அமித்ஷா ஜி மட்டும் தான் என்றார். 

இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், யார் பேசினால் யாருக்கு பதில் சொல்ல வேண்டும் என தரம் உள்ளது. சில பேர் விஞ்ஞானிகளாக அரசியல் விஞ்ஞானிகளாக தன்னை நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று கூறினார். 

இந்நிலையில் அண்ணாமலைக்கு மீண்டும் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார். அதில், அரசியலில் அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. நான் படிப்படியாக உயர்ந்து வந்தவன். அண்ணாமலை கருத்துகளை நான் பொருட்படுத்தவில்லை. நீங்களும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

கட்சியில் சேர்ந்து ஒரே ஆண்டில் தலைவராக பதவியேற்றவர் அண்ணாமலை. அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும். நான் ஏற்கனவே தெளிவாக கூறியிருக்கிறேன், எங்கள் மீது துரும்பு எறிந்தால்கூட நாங்கள் பதிலுக்கு இரும்பை வீசுவோம் என கூறியுள்ளார்.