தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற வந்த தி.மு.க தலைவர் கலைஞர் மகன் மு.க.அழகிரிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை கொடுத்துள்ளார். 

தாயார் மறைவுக்கு ஆறுதல் கூற வந்த தி.மு.க தலைவர் கலைஞர் மகன் மு.க.அழகிரிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மிக முக்கியமான வாக்குறுதி ஒன்றை கொடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் 5ந் தேதி சென்னையில் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் கலைஞர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

எதிர்பார்த்த அளவிற்கு அழகிரிக்கு கூட்டம் சேரவில்லை. ஆனால் அழகிரி தி.மு.க தலைவர் ஸ்டாலினின் தொந்தரவுகளையும் மீறி கூட்டத்தை கூட்டி தான் யாரென்று காட்டிவிட்டதாக செல்லூர் ராஜூ புகழ்ந்திருந்தார். இந்த நிலையில் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் கடந்த வாரம் திடீரென காலமானார்.அப்போதே அழகிரி நேரில் சென்று ஒச்சம்மாவுக்கு அஞ்சலி செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் அப்போது வேறு ஒரு முக்கியமான வேலையில் இருந்த காரணத்தினால் அழகிரியால் அங்கு செல்ல முடியவில்லை. இந்த நிலையில் நேற்று யாரும் எதிர்பாராத வகையில் திடீரென தனது ஆதரவாளர்கள் பட்டாளத்துடன் அழகிரி மதுரையில் உள்ள செல்லூர் ராஜூ வீட்டிற்கு வருகை தந்தார். நேராக செல்லூர் ராஜூவை சந்தித்து அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். பின்னர் செல்லூர் ராஜூ தாயாரின் உருவப்படத்திற்கும் அழகிரி மரியாதை செய்தார். 

இதனை தொடர்ந்து சுமார் 15 நிமிடங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தான் தந்தையை இழந்து தவிப்பதாகவும் நீங்கள் தாயாரை இழந்து தவிப்பதாகவும் அழகிரி, செல்லூர் ராஜூவிடம் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் கலைஞர் சிலை அமைக்க அனுமதி வேண்டி மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்துள்ளது பற்றியும் அழகிரி செல்லூர் ராஜூவுக்கு நினைவுபடுத்தினார். 

அதற்கு சட்டப்படி என்ன முடியுமோ அதனை கண்டிப்பாக செய்ய தான் நடவடிக்கை எடுப்பதாக செல்லூர் ராஜூ அழகிரியிடம் வாக்குறுதி கொடுத்துள்ளார். 

அதாவது அண்ணா அறிவாலயத்தில் கலைஞருக்கு ஸ்டாலின் சிலை அமைப்பதற்கு முன்னதாக மதுரையில் தான் சிலை அமைக்க வேண்டும் என்பது தான் அழகிரியின் திட்டம். என்ன தான் மாநகராட்சி ஆணையரிடம் சிலை அமைக்க அனுமதி கோரி மனு அளித்தாலும் மாவட்ட அமைச்சர் என்ற முறையில் செல்லூர் ராஜூ நினைத்தால், உடனடியாக அனுமதி பெற்றுக் கொடுக்க முடியும்.

இதனை மனதில் வைத்தே செல்லூர் ராஜூ தாயார் மறைவுக்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்ததுடன் கலைஞர் சிலையை மதுரை பால்பண்ணை சந்திப்பில் அமைப்பது குறித்தும் அழகிரி பேசியதாக சொல்லப்படுகிறது. ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுத்து வரும் அழகிரிக்கு அனுமதி பெற்றுத் தருவது மூலம் தி.மு.கவில் மீண்டும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்பது அ.தி.மு.கவின் கணக்கு. எனவே விரைவில் மதுரையில் கலைஞருக்கு சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.