ஆர்.கே.நகர் சுவாரஸ்யம்... முதலமைச்சர் யார்னே தெரியாம அமைச்சரவையில் குப்பை கொட்டும் ‘சொல் விஞ்ஞானி செல்லூரார்’!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாள் தோறும் சுவாரஸ்யங்கள் பல அரங்கேறிக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாளும் யாராவது எதையாவது எக்குத் தப்பாகப் பேசி, பரபரப்பைக் கிளப்பி விடுகிறார்கள். மற்றவர்கள் கிளப்பும் பரபரப்பு பெரிதாகத் தெரியாவிட்டாலும், அமைச்சர்கள் சிலரின் எதார்த்தமான பேச்சு, பல நேரங்களில் சிரிப்பலைகளை வரவைத்து விடுகின்றன.
இந்த முறையும் அப்படி கிச்சுகிச்சு மூட்டியிருப்பவர், அமைச்சர் செல்லூர் ராஜுதான்! தெர்மக்கோல் விஞ்ஞானி என்று சமூக ஊடகங்களாலும், எதிர்க்கட்சியினராலும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளான செல்லூர் ராஜு, இம்முறை ‘சொல் விஞ்ஞானி’ஆகியிருக்கிறார்.
களை கட்டியுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பிரசாரக் கூட்டட்தில், அதிமுக வேட்பாளர் மதுசூதனனை முதலமைச்சர் மீண்டும் குறிப்பிட்டுள்ளார் மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர், வினோபா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செல்லூர் ராஜு அதிமுக தொண்டர்களுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாரு கேட்டுக் கொண்டே வந்தார்.
இதனிடையே, செல்லூர் ராஜுவை செய்தியாளர்கள் சந்தித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய அவர், தொகுதி வளர்ச்சிக்காக முதலமைச்சர்... என்று கூறிவிட்டு, தான் சொன்னதில் ஏதோ தவறு இருந்ததை தாமே உணர்ந்து, பின் அதனை உடனடியாகத் திருத்திக் கொண்டு பேசினார்.
இதே போல், கடந்த மாதம் 4ஆம் தேதியன்றும் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்கே. நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனனை முதலமைச்சர் எனக் குறிப்பிட்டுப் பேசினார். பின்னர் தாம் சொன்னதில் தவறு இருப்பதை உனர்ந்து திருத்திக் கொண்டார்.
ஜெயலலிதா இருந்தவரை, தன்னைத் தவிர பெரும்பாலும் வேறு எவரையும் மேடை ஏற்றிப் பேச விட்டதில்லை. இப்போது அதிமுக., அமைச்சர்கள் பொது இடங்களில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், அவர்கள் பேச்சில் திக்கித் திணறுகிறார்கள். இவர்கள் இப்படித்தான் என்று தெரிந்ததால்தான் ஜெயலலிதா இவர்களை மேடை ஏற்றியதில்லை என்று சிலர் கூற, அப்போதே ஜெயலலிதா இவர்களை எல்லாம் மேடை ஏற்றிப் பேச விட்டிருந்தால், இது போல் இப்போது உளற மாட்டார்கள் என்று சிலர் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் சொல்லி வருகின்றனர்.