தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் ரத்தினம் , ராமச்சந்திரனின் தொழிற்கூட்டாளிகளான இரண்டு மாண்புமிகுக்கள் சிக்குகின்றனர். அவர்களை தொடர்ந்து இன்னும் களையெடுப்பை எதிர்பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான திண்டுக்கல் ரத்தினமும் புதுக்கோட்டை ராமச்சந்திரனும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, சேகர் ரெட்டி கைதை தொடர்ந்து, தற்போது இவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ரத்தினம் திண்டுக்கல்லை சேர்ந்தவர். ஆரம்பத்தில் திண்டுக்கல்லில் சர்வேயராக பணியாற்றி வந்தவர் பின்னர் ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தில், சர்வேயர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, முழுநேர ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். 

பின்னர் அதில் முன்னேற்றமாக மணல் தொழிலிலும் கால் பதித்தார். இவரது நிறுவனங்களுக்கு தரணி குழுமம் என்ற பெயரும் சூட்டினார். பணம் கொட்ட ஆரம்பித்தது. ஒருகட்டத்தில், கல்லூரி ஒன்றை விலைக்கு வாங்கி நடத்த ஆரம்பித்து ‘கல்வித்தந்தை ஆனார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இவரது உறவினர் ராமச்சந்திரன். அவருடன் சேர்ந்து மணல் பிசினஸில் இன்னொருபக்கம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார். ராமச்சந்திரனின் நண்பர் தான் அந்த மாண்புமிகு அமைச்சர். ஆட்சி முழுதும் கொடிகட்டி பறந்த அவர் தனது துறை மட்டுமல்ல அடுத்த துறையிலும் கால் பதித்தார். கோடியில் புரளும் பிஸ்னெசில் நுழைந்தார். 

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த ராமச்சந்திரனும் , அமைச்சரும் காலப்போக்கில் தொழில் பார்ட்னர்களாக மாறிபோனார்கள் . மணல் மாஃபியாக்களாக வளர்ந்தார்கள். திண்டுக்கல் ரத்தினத்தையும் புதுக்கோட்டை ராமச்சந்திரனையும் தெரியாதவர்கள் அதிமுக-வில் இல்லை

மணல் காண்ட்ராக்ட் மூலம் கொட்டிய பணத்தை அதிமுக-வில் பலருக்கும் பகிர்ந்து கொடுத்து, தங்களது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்கள். காவிரி ஆற்று மணல் ஒரு லாரி லோடு ரூ.15 ஆயிரம் ரூபாய்க்கு எடுத்து அண்டை மாநிலத்தில் லோடு ரூ.75 ஆயிரத்தில் இருந்து ரூ.90 ஆயிரம் வரை விற்று இவர்கள் சம்பதித்தது கணக்கே இல்லையாம்.

காவிரி ஆற்றங்கரையிலிருந்து மணலுடன் புறப்படும் லாரிகள், தமிழக-கர்நாடகா செக் போஸ்ட் பகுதியைக் கடக்காமல், ஓசூரிலிருந்து சில கிராமங்கள் வழியாக கர்நாடகாவுக்குள் சென்றுவிடும். சேகர் ரெட்டி செல்வாக்கு , அமைச்சர் தொடர்பு என பவராக பிஸ்னெஸ் நடந்துவந்துள்ளது. 

கடத்தப்பட்ட மணலில், கோடி கோடியாக கொட்ட ஆரம்பித்த விபரங்களை சேகர் ரெட்டியிடம் நடத்தப்பட்ட சோதனையின் எல்லா ஆதாரங்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றியிருக்கிறார்கள். இதில் மாண்புமிகுவும் சிக்குவாரா? சிபிஐ அதிகாரிகளுக்கே வெளிச்சம்.

இன்னொரு புறம் ஏற்கனவே பர்வலாக பெயர் அடிபட்ட அந்த மாண்புமிகு. அவர் மீது மத்திய அரசே குறிவைத்துள்ளது. குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்துக்கு வந்த இவரும் மண்பாடி லாரி ஆர்டிஓ கிட்ட சிக்கியது போல் சிக்க போகிறார் என தலைநகர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசாரணைகள் ஒருபக்கம் சென்றுகொண்டிருக்கையில் கட்டுக்கட்டாக புது இரண்டாயிரம் நோட்டு பிடிபட, அதுபற்றிய விசாரணையை முடுக்கிவிட்ட வருமான வரித்துறை பின்னர், அவர்கள் இருவரையும் புது நோட்டு விவகாரத்தில் கைது செய்தது. இவர்கள் இருவரையும் கஸ்டடி எடுத்து விசாரிப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. 

அப்படி விசாரிக்கும்போது, இந்த மாண்புமிகுக்கள் தொடர்பு பண பரிமாற்றம் எல்லாம் சிக்கும். அதுவும் புது நோட்டு எனபதால் வங்கிகள் விபரம் , வங்கி அதிகாரிகள் வாக்குமூலம், யார் யார் எல்லாம் தொடர்பு என்று பார்க்கும் போது பல மாண்புமிகுக்கள் சிக்குவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தற்போது இரண்டு அமைச்சர்கள் சிக்குவார்கள் , இருவருக்கும் கடும் நெருக்கடி காத்துகிடக்கிறது என்று கூறப்படுகிறது.