seeman pressmeet about TN politics

தமிழகத்தில் பாஜகவின் ஆட்சிதான் நடக்கிறது என்றும், இந்த ஆட்சி பாஜக விடம் அடகு வைக்கப்பட்டுவிட்டதாகவும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பொங்கித் தீர்த்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள ஆதித்தனார் சிலைக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பிறந்து வளர்ந்தவர்கள் தான் தமிழர்கள் என்று தெரிவித்தார்.

தமிழகத்தை தமிழர்கள்தான் ஆளவேண்டும் என்று கூறிய அவர் திருமாவளவன், திருநாவுக்கரசர், சரத்குமார், கார்த்திக், நான் போன்றோர்தான் தமிழர்கள் என்றும் எங்களுக்குத்தான் தமிழகத்தை ஆளும் உரிமை உள்ளது எனவும் சீமான் தெரிவித்தார்.

தமிழகம் தண்ணீரின்றி தவித்தபோது கர்நாடக அரசு நமக்கு தண்ணீர் தந்தார்களா? என கேள்வி எழுப்பிய சீமான், கர்நாடகாவில் இருந்தது தண்ணீர் வராது ஆனால் தலைவர்கள் மட்டும் வருவார்களா ? என்றார்.

டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக நமது விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்களை வந்து சந்திக்காத பிரதமர் மோடியை, ஓபிஎஸ் ஏன் போய் சந்திக்கிறார்? அவர்கள் இருவரும் டீ கடை நடத்தியவர்கள் என்பதாலா என கலாய்த்தார்.

தமிழகத்திற்கு வாழ வந்தவர்கள் மக்களையும் மண்ணையும் ஆள நினைப்பதை ஏற்க முடியாது என சீமான் கூறினார்.

தமிழகத்தில் பாஜக வலுவிழந்த நிலையில் உள்ளதால் தான் அவர்கள் ரஜினியை அரசியலுக்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

தமிழகத்தில் அடிப்படை மாற்றம், அமைப்பு மாற்றம் மற்றும் அரசியல் மாற்றம் வேண்டும் என்றும் சீமான் தெரிவித்தார்.