யாருடனும் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் சீமானிடம், இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாம் என்ற யோசனை கூறப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில், சத்தமே இல்லாமல் சாதித்தது விஜய் மக்கள் இயக்கம். தேர்தலில் போட்டியிடுவது பற்றி அறிவிப்போ,பிரச்சாரமோ செய்யவில்லை என்றாலும், வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து விஜய் பாராட்டிய புகைப்படம் வைரலானது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் களமிறங்க தன் தொண்டர்களுக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டாராம் விஜய். இதனால் பரபரப்பாக அதற்கான வேலைகளில் விஜய் ரசிகர்கள் இறங்கிவிட்டனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவனை தயாரிக்கும் பணிகள் முடிந்துள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கு யார் வேட்பாளர்கள் என்ற விவாதத்தில் இறங்கிவிட்டன. சீமானின் நாம் தமிழர் கட்சி சமீப காலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் குறிப்பிடும்படியான வாக்கு சதவிகித வளர்ச்சியை கண்டு வருகிறது. நிதானமாக, அதே நேரம் திடமான உயர்வை அதன் வாக்கு வங்கி பெற்றுவருகிறது. ஆனாலும் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் ஒன்றிரண்டு தேர்தல்களிலாவது கூட்டணி சேரலாமே என்று பேசிக்கொள்கின்றனராம் நாம் தமிழர் தம்பிகள்.

ஆனால் எந்தத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை என்று உறுதியாக இருக்கிறார் சீமான். சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு நெருக்கமாக உள்ள சினிமாகாரர் ஒருவர், ஆலோசனைக் கூட்டத்தில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்துடன் கூட்டணி வைக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளாறாம். விஜய் மக்கள் இயக்கம் இப்போது தான் வளரத்தொடங்குகிறது. இப்போது அவர்களுடன் கூட்டணி வைத்தால் விஜய் ரசிகர்களின் வாக்கு வங்கியை நாம் தமிழருக்கு மடைமாற்றுவது சுலபம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இந்த யோசனையை கேட்டு கடும் கோபம் கொண்டாறாம் சீமான். யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் நிலையாக நின்று களம் காண்பதால் தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வருகிறோம். கொள்கையிலிருந்து மாறினால் எல்லாம் போய்விடும் என்று கண்டிப்புடன் சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள் சீமான்...