அம்மாவும் 40 திருடர்களும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் 6 ஆண்டுகளுக்கு நடந்த ப்ளாஸ்பேக்கை சொல்லி சீமானை வெறுப்பேற்றி வருகிறார்கள் அதிமுகவினர். 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக வந்த சீமான், ‘’அலிபாபாவும் 40 திருடர்கள் போல அம்மாவும் 40 திருடர்களும் உள்ளனர். என்ன? அம்மா இப்போது இல்லை. திருடர்கள் தான் இருக்கின்றனர்’’எனக்கூறினார். இது அதிமுகவினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போது, ஈழத்துக்காக ஜெயலலிதாவை ஆதரிப்பதாக கூறினார் நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான். ‘’ராஜபக்சே நமது நண்பர், இந்தியாவுக்கு இலங்கை நட்புநாடு என்று காங்கிரஸ் கூறிவருகிறது. பாஜகவும் இலங்கையை நட்புநாடு என்றுதான் கூறிவருகிறது. ஆனால் முதல்வர் ஜெயலலிதாவோ, இலங்கை எதிரிநாடு என்று அறிவிக்கப்பட வேண்டும் என்கிறார். போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்கிறார் ஜெயலலிதா.

கச்சத்தீவை திரும்ப கேட்க முடியாது என்று காங்கிரசை போலவே பாஜகவும் கூறுகிறது. அதை திரும்ப பெற வேண்டும் என்பது ஜெயலலிதாவின் நிலைப்பாடாக உள்ளது. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருப்பவர் ஜெயலலிதா. இலங்கை ஒரே நாடாக நீடிக்க முடியாது. தமிழர்களுக்கான நாடாக ஈழம் உதயமாக வேண்டும், அதற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்ட ஒரே தலைவர் ஜெயலலிதாதான் என்பதால் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன். 

முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்க உத்தரவிட்டவருக்கு ஆதரவாக சீமான் பிரசாரம் செய்யலாமா என சிலர் விமர்சனம் செய்கிறார்கள். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது. தீர்ப்பை தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்படும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்றவர்களின் தண்டனையை குறைத்த ஜெயலலிதாவுக்கு நான் ஆதரவு அளிப்பதில் தவறு இல்லை’’ எனத் தெரிவிர்த்தார்.

ஜெயலலிதாவை சென்றும் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஈழத்தின் பேரைச் சொல்லி ஜெயலலிதாவிடம் அடமானம் வைத்த சீமானின் மானம் எங்கே போனது? மறைந்து போன அந்தத் தலைவியை வம்பிற்கிழுத்த சீமான் அம்மா இருக்கும்போது அவரை திருடர் எனச் சொல்லி இருப்பாரா? அந்த தைரியம் வந்திருக்குமா?’’ எனக் கொதிக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.