கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிதி அளித்தனர். 

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும், இயக்குநர் பாராதிராஜாவும் சந்தித்தனர். கொரோனா தடுப்பு பணிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும், இயக்குநர் இமயம் பாரதிராஜா ரூ.5 லட்சத்திற்கான காசோலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அத்துடன் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து கடிதம் அளித்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினோம். ஏழு பேர் விடுதலை குறித்துப் பேசினோம். அப்போது எழுவர் விடுதலை விவகாரத்தில் அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் தெரிவித்தார். வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வருகிறது. அதில் வரும் போக்கை வைத்து நகர்வோம் என்று முதல்வர் சொன்னார். விடாமல் தொடர்ச்சியாகப் போராடுவோம் என உறுதியளித்தார் எனக்கூறினார். 

திமுகவின் 30 நாட்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான்: சிறப்பாக இருக்கிறது. அனைத்துத் துறை அமைச்சர்களும் வேகமாக இயங்குகிறார்கள், குறிப்பாக மருத்துவத் துறையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சிறப்பாக இயங்குகிறார்கள். கொரோனா தொற்றில் அதைக் கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக உள்ளது என தெரிவித்தார்.