பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோருடன் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவனாகுவதை காலம் முடிவு செய்யும்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் அரசியலில் போட்டி போட்டு வெற்றிகளை பெற்று வருகின்றனர். ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் விஜயை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தனர். இந்தநிலையில் நடிகர் விஜய் அரசியல் பயணம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவித்த போது தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக வேண்டுமா என்பதை ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என்று நடிகர் விஜய் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் நடிகர் விஜய் இறங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். 

சந்திரசேகர ராவுடன் விஜய் சந்திப்பு

நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 66 படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிறது. வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இந்த நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவை நடிகர் விஜய் மரியாதை நிமித்தமாக நேற்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு சந்திரசேகர ராவின் மருமகன் சந்தோஷ் குமார் ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பின்போது தமிழக திரைப்படங்கள் தொடர்பாகவும், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசித்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர்ராவ் ஏற்பாட்டில் நடிகர் விஜய், பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்தாக கூறப்படுகிறது. ஏற்கனவே பிரசாந்த் கிஷோர் தமிழக சட்ட பேரவை தேர்தலின் போது திமுகவின் வெற்றிக்கு பணியாற்றினார். அப்போது நடைபெற்ற தேர்தல் வாக்கு பதிவின் போது நடிகர் விஜய் சைக்களில் வந்து வாக்களித்தது திமுகவிற்கு சாதகமாக அமைந்தது.

விஜய்-பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

இந்தநிலையில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பிரசாந்த் கிஷோரை நடிகர் விஜய் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த சந்திப்பின் போது ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகர் விஜய் புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்திருந்தார். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை நேற்று சந்தித்தார்.. இந்த சந்திப்பின் அடுத்த கட்டமாக பிரசாந்த் கிஷோரை சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.