மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் இரண்டாம் தலைநகரம் அமையும்... அதிமுகவுக்கு அந்த சான்ஸ் இல்ல... கே.என்.நேரு சரவெடி!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகும்போது இரண்டாம் தலைநகர் அமைக்கும் பணியை செய்வார் என்று திமுக முதன்மை செயலாளர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக மதுரையை அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்தார். மேலும் மதுரையில் உள்ள சிறப்புகளை பட்டியலிட்டும் தலைநகர கோரிக்கையை முன்வைத்தார். மதுரையைச் சேர்ந்த இன்னொரு அமைச்சர் செல்லூர் ராஜூவும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். மதுரையை தலைநகராக்க விரும்பினார் என்று தெரிவித்தார். ஆனால், திருச்சியைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சியை தலை நகராக்க மாற்ற வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவு என்றும் தலை நகராவதற்குரிய தகுதிகள் திருச்சிக்கே இருப்பதாக கருத்து தெரிவித்தார்.
தென் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக எனது பதவியே போனாலும் பரவாயில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியும் அளித்தார். திடீரென இரண்டாம் தலைநகர விவகாரத்தை கையில் எடுத்து ஆர்.பி. உதயகுமார் பேச ஆரம்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் இதுகுறித்து திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு கருத்து தெரிவித்துள்ளார்.ன்று கே.என். நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். விரும்பினார். ஆனால். தற்போது அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தங்கள் செல்வாக்கை வளர்த்துக்கொள்ளவும், சட்டப்பேரவைத் தேர்தலில் ஓட்டு வாங்கவும் மதுரையை இரண்டாம் தலைநகராக்க வேண்டும் பேசிவருகிறார்கள். ஒரு தலைநகரை உருவாக்க வேண்டுமென்றால் அதற்காக கட்டமைப்பை ஏற்படுத்த கோடிக்கணக்கில் தேவைப்படும். அதிமுகவினரால் தலைநகரை உருவாக்க முடியாது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வராகும்போது அந்தப் பணியை செய்வார்” என்று கே.என். நேரு தெரிவித்தார்.