உத்தரவை மீறி கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள்... நீதிமன்றம் போட்ட கிடுக்குப்பிடி..!
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முழு கல்வி கட்டணத்தையும் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தொற்றால் பள்ளி- கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முழு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளி- கல்லூரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரானா ஊடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே மாணவர்களின் கல்வி கட்டணம் குறித்து தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை சமீபத்தில் பிறப்பித்திருந்தது. அதில் பெற்றோர்களின் நிலை மற்றும் ஆசிரியர்களின் ஊதியம் உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு 2020 - 2021ம் கல்வி ஆண்டிற்கான கல்வி கட்டணத்தில், 40 சதவீதத்தை மட்டும் வரும் ஆகஸ்ட் 31 ம் தேதிக்குள் வசூலித்துக் கொள்ள கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் முழு கட்டணத்தையும் மாணவர்களிடம் வசூலிப்பதாக கூறி அரசு வழக்கறிஞர் வி.அன்னலட்சுமி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி முழு கல்வி கட்டணத்தையும் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவை மீறி முழு கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள், கல்லூரிகள் குறித்த விவரங்களை வரும் 17 ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’’என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.