மாதவராவ் மரணத்தை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. 

திமுக கூட்டணியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மாதவராவ்.வேட்புமனு தாக்கல் செய்து இரண்டே நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்ததால் கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும், அவருக்கு கொரோனா நெகட்டீவ் என்றே வந்தது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் நேற்று நுரையீரல் தொற்று அதிகரித்து மூச்சுத்திணறல் அதிகமானதை அடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாச கருவிகள் பொருத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை 7.55 மணி அளவில் காலமானார். தேர்தல் முடிவு தெரிவதற்கு முன்பே மாதவராவ் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேர்தலில் மாதவராவ் வெற்றி பெற்றால், அந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

கடந்த 6ஆம் தேதி நடந்தத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாயின. மாதவராவ் மரணத்தை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ஸ்ரீவில்லிபுத்தூரில் திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அதில் மாதவராவ் வெற்றி பெற்றால் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் விளக்கமளித்துள்ளார்.