சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு... ஜாமீன் கேட்ட போலீஸார்.. அதிரடியாக மறுத்த உச்ச நீதிமன்றம்.!
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் போலீஸாருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸாரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “இவ்விவகாரத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ், எங்கள் விசாரணையில் இறக்கவில்லை. இதயப் பாதிப்பு, சுவாசப் பிரச்சினை ஆகிய காரணத்தால்தான் இறந்தார்கள். மருத்துவமனை செல்லும் வழியில்தான் இறந்தனர். இந்த வழக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, வழக்கு விசாரணையை சில காலம் ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரினர்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “நீங்கள் எதுவும் செய்யவில்லையெனில், அவர்கள் ஏன் கஸ்டடியிலிருந்து விடுவிக்கப்படவில்லை? அவர்கள் உடலில் காயம் இருந்ததாக பிரேத பரிசோதனை கூறுகிறதே? அவர்களை யார் காயப்படுத்தினார்கள்?” என்று கேள்வி எழுப்பினர். வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் போலீஸாரே இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவர்கள் இன்னும் விசாரணை நீதிமன்றத்தால் குறுக்கு விசாரணை செய்யப்படவில்லை. அவர்கள் விசாரிக்கப்படும் வரை இவர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது” என்று தெரிவித்தார்.
இதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். “விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை.” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.