"Shashi Tharoor" : "அழகான எம்.பிக்கள்!!" வர்ணித்த சஷி தரூர்.. வாபஸ் வாங்க வைத்த நெட்டிசன்கள்..
நாடாளுமன்ற கூட்ட தொடரில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் , 6 பெண் எம்.பி களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் 6 பெண் எம்.பிக்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். மேலும் இந்த புகைபடத்தை பதிவிட்டு, யார் சொன்னது மக்களவை வேலை செய்வதற்கு ஒரு கவர்ச்சியான இடமில்லை என்றும், அதான் இந்த ஆறு பெண் எம்.பி கள் இருக்கின்றார்களே எனும் வகையில் அதில் எழுதியிருந்தார். தற்போது இந்த பதிவும் அதில் குறிப்பிட்டிருந்த வாசகமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த செல்பியில், திரிணாமுல் காங்கிரஸின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் திமுகவின் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் இருந்தனர்.
எம்.பி சசி தரூரின் இந்த பதவினை டேக் செய்து பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பெண்கள் என்றாலே கவர்ச்சி , வசீகரம் மட்டும் தானா என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பெண்களை அறிவு, திறமை அடிப்படையில் பார்க்கவேண்டும் எனவும் சமுத்துவ நோக்கில் அணுகப்பட வேண்டியவர்கள் என்றும் கருத்துகளை முன்னிறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, எழுத்தாளர் வித்யா கிருஷ்ணன் கூறும்போது, "நாடாளுமன்றத்தில் உள்ள பெண்கள் உங்கள் பணியிடத்தை "கவர்ச்சிகரமானதாக" மாற்றுவதற்கான அலங்காரப் பொருட்கள் அல்ல. அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீங்கள் அவமரியாதையாகவும், பாலியல் ரீதியாகவும் நடந்து கொள்கிறீர்கள்" என்று கூறியுள்ளார். மேலும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் , தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்ஒருவர் தனது நடவடிக்கைகளால், சமுத்துவத்தை பற்றி பேசுவதற்கு ஆளானவர் என்று நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார்.
கடும் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து, சக பெண் எம்.பி.க்களுடன் செல்பி எடுத்தது வெறும் “பணியிட தோழமையின் நிகழ்ச்சி” என்று சசிதரூர் விளக்கம் அளித்தார். மேலும் முந்தைய தனது டிவிட்டை டேக் செய்து பதிவிட்ட மற்றொரு டிவிட்டரில், முழு செல்பி விஷயமும் (பெண் எம்.பி.க்களின் முயற்சியில்) நல்ல நகைச்சுவையுடன் எடுக்கப்பட்டது என்றும், அதே உணர்வில் அதை டுவீட் செய்யும்படி அவர்கள்தான் என்னிடம் கேட்டார்கள் என்று சொல்லியுள்ளார். நான் கூறியவற்றால் சிலர் மனம் புண்பட்டிருப்பதற்கு வருந்துகிறேன் என்று கூறிய அவர், பணியிட தோழமை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அதில் பதிவிட்டுள்ளார்.
பிற அரசியல்வாதிகள் போல் அல்லாமல் , எம்.பி சசீதரூர் அரசியல் களத்தில் எப்பொழுதும் ஒரு ஜாலியான மனிதராகவே பார்க்கபடுகிறார். அவ்வப்போது முன்னணி நடிகைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதும், அதனை தனது சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் இவர் அரசியல் அல்லாத காரணங்களுக்காக, அடிக்கடி தலைப்பு செய்திகளில் சிக்குவதை சாதாரண விஷயமாக கொண்டுள்ளார். இவரது மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கிலும் இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது . பின்னர், கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பெண் எம்.பி களுடன் இவர் எடுத்த செல்பி புகைபடத்தினால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளளார்.