சசிகலா வருகை எந்த வகையிலும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.. திமுக கூட்டணி கட்சித் தலைவர் கருத்து.
சசிகலா வருகை எந்த வகையிலும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை, அவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டனர். இந்த ஆட்சியிலே மதநல்லிணக்கத்தை சீர்கெடும் நிலைமைக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
சசிகலா வருகை எந்த வகையிலும் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை என திமுக கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவரான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்திய முஸ்லிம் லீக் சார்பில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அவர் தொடர்ந்து தேர்தல் பரப்புரை செய்து கொண்டிருக்கும் பணியை பாராட்டியுள்ளோம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் அவரின் தேர்தல் பரப்புரை வெற்றிகரமாக அற்புதமாக மக்களுடைய உள்ளங்களை தொடும் அளவுக்கு நடந்துகொண்டிருக்கிறது, வரக்கூடிய தேர்தலில் நிச்சயமாக திராவிட முன்னேற்றக் கழகம் மிகப்பெரிய வெற்றிகளை பெற்று, கலைஞருடைய ஆட்சியை தமிழகத்தில் நிறுவும் என்பதில் சந்தேகமே இல்லை,
ஆகவே அவரை சந்தித்து வாழ்த்துக் கூற வந்தோம். இந்தியன் முஸ்லிம் லீக் சார்பாக நடக்க வேண்டிய மாநாடு வரக்கூடிய 27ம் தேதி சனிக்கிழமை சென்னை பெரியார் திடலில் நடைபெறும், குறுகிய அளவிலான மாநாடு நடத்த உள்ளோம், தேர்தல் பணிக்குழுவினர் மாநாடு இன்று 38 மாவட்டங்களை 52 மாவட்டங்களாக பிரித்து மாவட்டத்திற்கு 50 பேர் பங்கேற்கும் வகையில் 2000 ஆயிரம் பேர் கலந்துகொள்ள வகையில் ஏற்பாடு செய்திருக்கிறோம். தேர்தலில் எப்படிப்பட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தான் அந்த மாநாடு நடைபெற உள்ளது. மாலை 6 மணி முதல் 7 மணி வரை திமுக தலைவர் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளோம்.
தொகுதி பங்கீடு பற்றியோ தொகுதிகள் பற்றிய பேச்சு வார்த்தையோ ஆரம்பிக்கவில்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்ட பிறகு அது குறித்து அறிவித்த பிறகு தொகுதி பற்றி பேச்சுவார்த்தை நடக்கும், சசிகலா வருகை எந்த வகையிலும் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை, அவரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கி விட்டனர். இந்த ஆட்சியிலே மதநல்லிணக்கத்தை சீர்கெடும் நிலைமைக்கு பாரதிய ஜனதா கட்சி ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளனர். தமிழ் நாட்டில் மத ரீதியாக பிரித்து ஒருவருக்கு ஒருவர் மோதவிட்டு இதன் மூலம் தேர்தலில் லாபம் தேடிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் பா ஜ கவினர் உள்ளனர், இது தமிழகத்தில் என்றும் நிலைக்காது இவ்வாறு கூறியுள்ளார்.