சசிகலா முதலமைச்சராக பதவியேற்பாரா?.ஆளுநரின் அனுமதி கிடைக்காததால் தாமதம்…
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓபிஎஸ் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதே நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே கட்சி மற்றும ஆட்சியில் ஒரே தலைமைதான் இருக்க வேண்டும் என்றும் எனவே, தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சில அமைச்சர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கழக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் , சசிகலா சட்டமன்றகுழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதற்கு வசதியாக ஓபிஎஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இன்று அல்லது 9 ஆம் தேதி சசிகலா முதலமைச்சராக பதவியேற்றுக் கொள்வார் என தகவல்கள் வெளியாகின. இதற்காக சென்னை பல்கலைக் கழக நுற்றாண்டு விழா அரங்கில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன.
சசிகலா தன்னை அதிமுக சட்டமன்றக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்தற்கான கடிதத்தை ஆளுநரிடம் கொடுத்த தன்னை பதவிஏற்க வருமாறு அழைப்பு விடுக்க கோருவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக ஜெ மற்றும் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு இன்னும் ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த விவகாரம் சசிகலாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் முதலமைச்சராக பதவியேற்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் ஆளுநரின் தேதி கிடைக்காததால், பதவியேற்பு விழா தள்ளிப்போகும் என தெரிகிறது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெறவுள்ள விழாவில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் கலந்து கொள்வார் என்றும் பின்னர் சென்னை வந்து சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என தவகல் வெளியாகியிருந்தது. ஆனால் தற்போது அவர் தனது கோவை வருகையை ரத்து செய்துள்ளார். தற்போது டெல்லியில் உள்ள அவர் தமிழகம் வராமல் நேராக மும்பை செல்வார் என்றும் தெரிகிறது.
இதனால் சசிகலா பதவியேற்பு விழா தள்ளிப்போகிறது
