சசிகலா பூரண குணமடைய வேண்டும்... ஓ. பன்னீர்செல்வம் இளைய மகனின் அக்கறை அறிக்கை..!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் சசிகலா நடராஜன் பூரண குணமடைய வேண்டும் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைப் பெற்று கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, விடுதலை ஆவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நான்காண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த சசிகலா நேற்று விடுதலை ஆனார். ஆனால், கொரோனா காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல்நிலை தேறிய பிறகு சசிகலா தமிழகம் திரும்ப உள்ளார். இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அம்மையார் சசிகலா நடராஜன் பூரண குணமடைந்து இனிவரும் காலங்களில் நல்ல உடல்நலம் பெற்று அறம் சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல. என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு” என்று அதில் ஜெயபிரதீப் குறிப்பிட்டுள்ளார்.