திவாகரனுக்கு சசிகலா அனுப்பிய தூது..! ஒதுக்கப்பட்ட டிடிவி..! விரைவில் மன்னார்குடி விஜயம்..!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதலமைச்சராக்க டிடிவி தினகரன் தீவிர முயற்சி மேற்கொண்டார். டிடிவிக்கு உறுதுணையாக டாக்டர் வெங்கடேசும் சசிகலாவிற்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையை தூண்டினார். ஆனால் அப்போது அவசரம் வேண்டாம், என்று சசிகலாவிற்கு ஆலோசனை வழங்கிய ஒரே நபர் திவாகரன் தான் என்கிறார்கள்.
தீவிர அரசியலுக்கான முதல் முன்னெடுப்பை முடித்த கையோடு தனது சகோதரர் திவாகரனை சென்னை வருமாறு சசிகலா தூது அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதலமைச்சராக்க டிடிவி தினகரன் தீவிர முயற்சி மேற்கொண்டார். டிடிவிக்கு உறுதுணையாக டாக்டர் வெங்கடேசும் சசிகலாவிற்கு முதலமைச்சர் பதவி மீது ஆசையை தூண்டினார். ஆனால் அப்போது அவசரம் வேண்டாம், என்று சசிகலாவிற்கு ஆலோசனை வழங்கிய ஒரே நபர் திவாகரன் தான் என்கிறார்கள். இதே போல் அப்போது உயிருடன் இருந்த நடராஜனும் கூட சசிகலாவை அவசரம் வேண்டாம் என்று எச்சரித்திருந்தார். ஆனால் டிடிவி தினகரன், வெங்கடேஷ் போன்றோர் போட்ட தூபங்களை தொடர்ந்து சசிகலா ஓபிஎஸ்சை பதவி விலக வைத்து அதிமுக சட்டமன்றகுழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரை முதலமைச்சராக பதவி ஏற்க கடைசி வரை ஆளுநர் அழைக்கவே இல்லை.
பிறகு உச்சநீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்க சசிகலா சிறை செல்ல நேரிட்டது. அப்போதும் கூட அதிமுகவை தினகரனை நம்பியே கொடுத்துவிட்டு சென்றார் சசிகலா. ஆனால் அப்போது சென்னையில் முகாமிட்டிருந்த திவாகரன் முக்கிய முடிவுகளை தன்னை கலந்து ஆலோசித்து தான் எடுக்க வேண்டும் என்று தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். மேலும் ஒரு சில சமயங்களில் வெளிப்படையாகவே தினகரனுக்கு எதிரான செயல்களில் திவாகரன் ஈடுபட்டார். இதனால் எரிச்சலான தினகரன், பெங்களூர் சென்று சசிகலாவிடம் போட்டுக் கொடுக்க, தனக்கும் தனது சகோதரர் திவாகரனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கடிதம் வெளியிட்டார் சசிகலா.
இதன் பிறகு தனக்கும் தனது சகோதரிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று திவாகரன் பேட்டி அளித்தார். அத்துடன் புதிதாக கட்சியும் தொடங்கி தனியாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கூட அவரை திவாகரன் சந்திக்காமலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் தினகரனை சசிகலா கட்சியில் இருந்து ஓரங்கட்டி வைத்துள்ளார். தனது அரசியல் ரீதியிலான அனைத்து முடிவுகளையும் மறைந்த தனது கணவரின் சகோதரர்கள் மூலமாகவே எடுத்து வருகிறார். மேலும் தன்னுடைய நிகழ்ச்சிகளையும் கூட அவர்களை வைத்து இறுதி செய்து வருகிறார். இந்த நிலையில் விரைவில் பொதுவெளியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட சசிகலா திட்டமிட்டு வருகிறார்.
இதற்கு தனது சகோதரர் திவாகரன் ஒத்துழைப்பு தேவை என்று சசிகலா கருதுவதாக கூறுகிறார்கள். எனவே தான் அவரை உடனடியாக சென்னை வருமாறு சசிகலா தூது அனுப்பி வைத்ததாக சொல்கிறார்கள். ஆனால் திவாகரன் தரப்பு பிடிவாதம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சசிகலா சென்று இருந்தார். அப்போது சசிகலா மன்னார்குடி வந்து உறவுகளை சந்திப்பார் என்று திவாகரன் எதிர்பார்த்து இருந்தார். ஆனால் சசிகலா அப்படி செய்யவில்லை. இதனால் அவர் மீதான அதிருப்தி திவாகரனுக்கு அதிகமானதாக கூறுகிறார்கள்.
எனவே சசிகலா மறுபடியும் மன்னார்குடி வந்து உறவினர்களுடன் இணக்கம் காட்ட வேண்டும் என்று திவாகரன் எதிர்பார்ப்பதாக சொல்கிறார்கள். இதனை சசிகலாவும் உணர்ந்தே வைத்திருப்பதாகவும் எனவே விரைவில் அவர் மன்னார்குடி செல்ல வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் வெளி உலகிற்கு இதுவரை வரை திவாகரன் – சசிகலா சந்திப்பு வெளிப்படையாக நடைபெறவில்லை என்றாலும் இருவரும் தொடர்பில் தான் இருக்கிறார்கள் என்கிறார்கள். சசிகலா தொலைபேசியில் பேச அதிமுக நிர்வாகிகளை தேர்வு செய்து கொடுத்ததில் திவாகரனுக்கும் பெரும் பங்கு உள்ளதாகவும் சிலர் கூறுகிறார்கள். இதுவரை மன்னார்குடியில இருந்த படி தனது சகோதரருக்கு உதவிய திவாகரன் விரைவில் சென்னை வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.