கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இதைதொடர்ந்து கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ். தனி அணியை உருவாக்கினார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரண்டாக பிரிந்துள்ளது.

சசிகலா தரப்பினர், தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரை வலியுறுத்தி வந்தனர். அதே நேரத்தில், அதிமுக எம்எல்ஏக்களை, சசிகலா தரப்பினர் மிரட்டி கடத்தி வைத்துள்ளதாகவும், சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது எனவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

இதற்கிடையில்,சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவி பிரமாணம் நடந்தது. அப்போது, 15 நாட்களுக்குள் தனிப்பெரும்பான்மை காட்ட வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடந்தது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நேற்று நடந்த சட்டமன்ற நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சந்திக்க வந்த வக்கீல்களிடம், சசிகலா சிறிது நேரம் பேசியுள்ளார். அப்போது, அவர் சற்று மகிழ்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில், அனைத்து கைதிகளும் ஒரே மாதிரி நடத்தப்படுகின்றனர். இங்கு முதல் வகுப்பு, 2ம் வகுப்பு சிறைகள் கிடையாது. உணவு வகையும் ஒரே மாதிரி வழங்கப்படுகிறது. தொலைக்காட்சி வசதியும் கிடையாது.

இதனால் சசிகலா, சிறைச்சாலையில் உள்ள ஒரு அதிகாரியின் அனுமதி பெற்று, அவரது அறையில் நேற்று நடந்த சட்டமன்ற நிகழ்வுகளை பார்த்து ரசித்தார் என சிறை அதிகாரிகள் கூறினர்.