ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உடன் இணைந்து செயல்படத் தயார்…. வி.கே.சசிகலா அதிரடி பேட்டி!
எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிகலா, அங்கு அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்துவைத்தார்.
எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றிய சசிகலா, அங்கு அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டையும் திறந்துவைத்தார்.
அதிமுக பொன்விழா ஆண்டை சசிகலா ஒருபுறமும், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பு மறுபுறமும் கொண்டாடி வருகின்றனர். நேற்றைய தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் அண்ணா நினைவிடங்களில் சசிகலா மரியாதை செலுத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கு சென்று அங்கு மரியாதை செலுத்திய சசிகலா, பின்னர் அதிமுக கொடியை ஏற்றிவைத்தார். அங்கு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா என்று பொறிக்கபப்ட்டிருந்த கல்வெட்டையும் அவர் திறந்துவைத்தார்.
இதனைத்தொடர்ந்து ராமாவரம் தோட்டத்திற்கு சென்ற சசிகலா அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சசிகலா, கட்சியின அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எதிர் தரப்பை போல், தமது ஆதரவாளர்கள் தரம் தாழ்ந்து பேச வேண்டாம் என்றும் சசிகலா அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் தியாகராயர் நகரில் உள்ள தமது இல்லத்திற்கு சென்ற சசிகலா உடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுவேன். அதிமுக தொண்டர்களுக்கான கட்சி, இதனை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல் செயல்படுவேன் என்றும் கூறினார்.
அப்போது எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை இணைத்துக்கொண்டு செயல்படுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சசிகலா, நிச்சயமாக எல்லோரையும் ஒன்றிணைத்து நல்லபடியாக 2024-ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில், மிகப்பெரிய வெற்றிபெறுவோம் என்று சசிகலா கூறினார். சசிகலா இறங்கிவந்துள்ள நிலையில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மனம் மாறுவார்களா என்று கட்சித் தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர்.