சசிகலா புஷ்பா பின்னால் அணிவகுக்கும் தமிழக அமைச்சர்கள் - இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற முயற்சி?
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா அதிமுக வில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்னும் அரசியல் லைம் லைட்டில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே அவருக்கு எதிராக மாநிலங்களவையில் தைரியமாக குற்றச்சாட்டை சுமத்தியவர் இந்த சசிகலா புஷ்பா.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதை கடுமையாக சசிகலா புஷ்பா எதிர்த்தார்.
அவர் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தேர்தல் ஆணையத்தில் முதன்முதலில் புகார் அளித்ததும் சசிகலா புஷ்பாதான்.
அது மட்டுமல்லாமல் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இது தொடர்பாக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தார்.
சசிகலா தரப்பினர் சசிகலா புஷ்பாவுக்கு எத்தனையோ குடைச்சல்கள் கொடுத்த போதும் அவர் எதிர்த்து நின்று சசிகலா தரப்பினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலின் போது இரட்டை இலை சின்னம் தினகரன் தரப்புக்கு கிடைக்காமல் முடக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையத்தில் சசிகலா புஷ்பா சமர்ப்பித்த ஆவணங்கள் முக்கிய காரணமாக அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழக முக்கிய அமைச்சர்களும், சில எம்எல்ஏக்களும் சசிகலா புஷ்பாவின் பின்னால் அணி வகுத்து அடுத்தகட்ட நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களது முதல் அசைன்மெண்ட் இரட்டை இலை சின்னத்தை மீட்பது எனவும் கூறப்படுகிறது. இதற்காக மூவ்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சசிகலா புஷ்பாவை யாரோ பின்னாலிருந்து இயக்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
சசிகலா புஷ்பா பின்னால் முக்கிய சில அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் போகும் நிலை உருவாகியுள்ளது. ஆனால் சசிகலா புஷ்பாவின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் வரலாற்றில் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.