முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் உடல் நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதுகுறித்து, சிபிஐ விசாரிக்க வேண்டும் என சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது.

முதலமைச்சர் ஜெயலலிதா, மீண்டும் ஆட்சி செய்ய வேண்டும். அதையே அனைத்து தரப்பு மக்களும் விரும்புகிறார்கள்.
எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சிலர், அதிமுகவில் முக்கிய பொறுப்பை ஏற்க இருப்பதாக பேசுகிறார்கள். அதிமுகவையும், தமிழக அரசையும் சிலர் கைப்பற்ற நினைக்கிறார்கள். அதற்கான சதி வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இந்த சதிவேலையில் ஈடுபடுபவர்கள், கோடி கணக்கில் பணம் வைத்துள்ளனர். இதுகுறித்து சிபிஐ விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால், அவருடன் யாரும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களே முழு பொறுப்பு. ஆனால் சிலர், தானாகவே மருத்துவமனையில் முகாமிட்டு இருக்கிறார்கள்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்கள். ஆனால், அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

எனவே, அதிமுகவில் இருக்கும் 2ம் கட்ட தலைவர்கள் உடனடியாக வெளியே வர வேண்டும். அதிமுகவை காப்பாற்ற முன் வர வேண்டும். என்னிடம் சில தலைவர்கள் பேசி கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் மன குமுறலையும், வேதனையும், தங்கள் அதிருப்தியை கூறுகிறார்கள். இனியாவது அவர்கள் தைரியமாக வெளிப்படையாக வெளியே வந்து பேச வேண்டும்.
தமிழக அரசு சார்பில் அனுப்பபடும் கடிதத்தில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் கையெழுத்தின் உண்மை தன்மையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். முதல்வர் கையெழுத்தில்லாமல் உள்ளாட்சி வேட்பாளர் பட்டியல் வெளியானால், அதை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க கூடாது.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் ஆனதற்கு, பெரிய சதி இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன். இதற்கு என்ன காரணம் என்பது பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
