sasikala parole conditions make her supporters discontent

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சசிகலாவிற்கு கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் உடல்நலம் குன்றியிருக்கும் அவரது கணவரைக் காண பரோல் வழங்கப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனைக் காண, 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம்.

கணவரின் உடல்நிலையைக் காரணமாக காட்டி சசிகலா பரோல் கேட்டிருந்தாலும் கட்சிப் பிரச்னையை தீர்க்கவே பரோலில் வெளிவர விரும்பியதாக கூறப்படுகிறது.

கட்சியில் நிலவும் பிரச்னைகளையும் பிரிவினைகளையும் சிறையிலிருந்து வெளிவந்து சரிசெய்யலாம் என நினைத்துள்ளார் சசிகலா. ஆனால் சிறை நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகள், அவரது நோக்கத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது.

சசிகலாவுக்கு சிறை நிர்வாகம் விதித்துள்ள நிபந்தனைகள்..!

1. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை மட்டுமே சசிகலா சந்திக்க வேண்டும். பரோல் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும்.

2. வீட்டிலோ மருத்துவமனையிலோ வேறு யாரையுமே சந்திக்கக்கூடாது.

3. அரசியல் நடவடிக்கைகளிலோ கட்சி நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது.

4. ஊடகங்களை சந்திக்கவோ எந்த கருத்தும் தெரிவிக்கவோ கூடாது.

இவ்வாறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பரோலில் வந்து தனது ஆதரவு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து தினகரன் மீதான அதிருப்தியை சரிசெய்து கட்சியை முறைப்படுத்தலாம் என நினைத்த சசிகலாவிற்கு, இந்த நிபந்தனைகள் முட்டுக்கட்டையாகவே கருதப்படுகிறது. 

ஆனால் இந்த முட்டுக்கட்டைகள், தடைகளையெல்லாம் மீறி கட்சியின் பிரச்னைகளை சரிசெய்வாரா சசிகலா? என்ற எதிர்பார்ப்பு கட்சி தொண்டர்களிடையே நிலவுகிறது. ஆனாலும் சசிகலாவிற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள், சசிகலா ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறதாம்.