அதிமுகவின் வேஸ்ட் லக்கேஜ் சசிகலா : நத்தம் விஸ்வநாதன் விளாசல்!
அதிமுகவின் வேஸ்ட் லக்கேஜான சசிகலாவை, தேவை இல்லாமல் எடப்பாடி அரசு தூக்கி சுமக்கிறது என்று, பன்னீர் அணியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
அணிகள் இணைப்புக்கு தயார் என்று இரு தரப்பிலும் கூறி வந்தாலும், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டும் போக்கு தொடர்கிறதே ஒழிய, இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த, பன்னீர் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், சசிகலா அதிமுகவின் வேஸ்ட் லக்கேஜ் என்று கூறி உள்ளார்.
மேலும், அணிகள் இணைப்புக்கு இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தோம். ஆனால்,அதில் சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்களை, அரசியலை விட்டு நீக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை.
ஆனால் சசிகலாவால் பதவிக்கு வந்த செங்கோட்டையன், சீனிவாசன், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், அதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.
தற்போது, சசிகலாவின் பினாமி ஆட்சிதான் நடந்து வருகிறது. இல்லையெனில், ஸ்டாம்ப் பேப்பரில், சசிகலா பொது செயலாளர், தினகரன் துணை பொது செயலாளர் என்று கையெழுத்து வாங்குவார்களா?.
அதேபோல், நாஞ்சில் சம்பத், புகழேந்தி ஆகியோர் தினகரனுக்கு ஆதரவாக, போராட்டமும், பொது கூட்டமும் நடத்துவார்களா?
சசிகலாவோ ஒரு வேஸ்ட் லக்கேஜ் ஆக இருக்கும்போது, எடப்பாடி தரப்பினர், அதை ஏன் தூக்கி சுமக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது ஓ.பி.எஸ், அரசியல் கட்சி தலைவர்கள், கவர்னர் என யாரையும் பார்ப்பதற்கு சசிகலா அனுமதிக்கவில்லை.
அந்த நேரத்தில் ஏதாவது பேசினால் அது அம்மாவின் சிகிச்சைக்கு பின்னடைவு ஏற்பட்டு விடும் என்ற ஒரே நோக்கத்தில்தான், ஓ.பி.எஸ். எதுவும் பேசாமல் இருந்தார்.
அதன் பிறகு, அம்மா மரணம் குறித்து விசாரணை செய்ய பன்னீர் முயற்சித்த போதுதான், அவரை சசிகலா முதல்வர் பதவியில் இருந்து நீக்கினார். அதனால், அப்போது, விசாரணை கமிஷன் அமைக்க முடியாமல் போய்விட்டது.
பன்னீர் அணிக்கு பெருகி வரும் ஆதரவை பொறுத்து கொள்ள முடியாதவர்கள், எங்களுக்கு பாஜகவின் ஆதரவு இருப்பதாக பொய் தகவல் பரப்பி வருகின்றனர். அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை.
எங்கள் அணியின் சார்பில் ஊர், ஊராக சென்று நிர்வாகிகளை சந்தித்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட முயற்சி செய்வதை அறிந்து, எடப்பாடியும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாட முயற்சிக்கிறார்.
எங்கள் நிபந்தனை கட்சிக்கும், ஆட்சிக்கும் நல்ல பெயரை ஏற்படுத்தி பலம் சேர்க்கும், அதை அங்குள்ள சிலரே தடுப்பதால், இழப்பு எங்களுக்கு அல்ல. இப்போதும், இரு அணிகளும் இணைய வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.