அப்பலோவில் சசிகலா..! மதுசூதனன்..! அதிமுக அலுவலகத்தில் அனல் பறந்த விவாதம்..!
அதிமுகவை மறுபடியும் கைப்பற்ற சசிகலா காய் நகர்த்தி வருகிறார். அதிமுக தொண்டர்களின் அபிமானத்தை பெற்றுவிட்டால் போது கட்சி தன் வசம் வந்துவிடும் என்று அவர் நம்புகிறார். இதற்காக அதிமுக தொண்டர்களை கவரும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன.
அப்பலோவில் மதுசூதனனை சந்தித்துவிட்டு சசிகலா திரும்பியுள்ள நிலையில் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் அவசரமாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அதிமுகவை மறுபடியும் கைப்பற்ற சசிகலா காய் நகர்த்தி வருகிறார். அதிமுக தொண்டர்களின் அபிமானத்தை பெற்றுவிட்டால் போது கட்சி தன் வசம் வந்துவிடும் என்று அவர் நம்புகிறார். இதற்காக அதிமுக தொண்டர்களை கவரும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்து வருகின்றன. தொண்டர்களுடன் செல்போனில் உரையாடியது, கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் பேசியது போன்ற நடவடிக்கைகள் மூலம் சசிகலா ஊடகங்களில் விவாதிப் பொருள் ஆனார். இந்த நிலையில் சென்னை அப்பலோவில் சிகிச்சை பெற்று வரும் மதுசூதனனை நேரில் சென்று சந்தித்து திரும்பியுள்ளார் சசிகலா.
கடந்த 2017ம் ஆண்டு ஓபிஎஸ் தர்ம யுத்தம் தொடங்கினார். அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தை விரட்ட வேண்டும் என்பது தான் அந்த தர்ம யுத்தத்தின் நோக்கம். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ் பின் வந்து நின்றவர் அவைத் தலைவர் மதுசூதனன். அதோடு மட்டும் அல்லாமல் சசிகலாவிற்கு எதிராகவும் மிகக்கடுமையான விமர்சனங்களை அவர் முன் வைத்தார். அப்படி இருந்தும் கூட உடல் நிலை சரியில்லை என்ற உடன் சென்னை அப்பலோ சென்று மதுசூதனை நேரடியாக சந்தித்துவிட்டு திரும்பியுள்ளார் சசிகலா. இது தனக்கு யார் மீதும் வஞ்சகம் இல்லை என்பதை அதிமுக நிர்வாகிகளுக்கு சசிகலா தெரிவிப்பதற்கான குறியீடாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தான் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் திடீர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. காலை பத்து மணிக்கே இந்த கூட்டம் துவங்கும் எனஎதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்ற காரணத்தினால் தாமதமாக தொடங்கியது. வழக்கத்தை விட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிக அளவில் அதிமுக அலுவலகத்தில் கூடியிருந்தனர். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அதிமுக அலுவலகம் வந்த போது தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். உள்ளே சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்றது. இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற ரெய்டை கண்டித்து பேசினார்.
பின்னர் பேசிய இபிஎஸ்., விழுப்புரத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தார். உள்ளே என்ன நடந்தது என்று விவாதித்த போது, முதலில் இந்த டிசம்பருக்குள் கட்சியின் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் மற்றும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். இது பற்றியே பெரிய அளவில் விவாதம் நடைபெற்றதாக சொல்கிறார்கள். அதன் பிறகு, சசிகலாவிற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றிய கட்சியின் முன்னாள் நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவது என்று முடிவெடுத்ததாக சொல்கிறார்கள். பிறகு மிகவும் குறிப்பாக சசிகலா ஆக்டிவ் பாலிடிக்சிற்குள் வந்துள்ள நிலையில் நிர்வாகிகள் எப்படி செயல்பட வேண்டும் என்று இபிஎஸ் வகுப்பெடுத்ததாக சொல்கிறார்கள்.
இதை தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மூத்த நிர்வாகிகள் மட்டும் அதிமுக அலுவலகத்தில் தனியாக பேசியுள்ளனர். அப்போது கட்சியின் அடுத்த அவைத் தலைவர் யார் என்பது குறித்து விவாதம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. மதுசூதனன் மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில் தற்போதெ அவைத்தலைவர்கள் குறித்து ஓபிஎஸ் – இபிஎஸ் இணக்கமான முடிவை எடுக்க வேண்டும் என்று மற்ற சீனியர்கள் கூறியதாக சொல்கிறார்கள். தற்போதைய சூழலில் தேர்தல் ஆணையம் கட்சியின் நிர்வாகியாக அதிமுக அவைத் தலைவரைத்தான் அங்கீகரித்துள்ளது.
எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவியில் தனது ஆதரவாளர் பொன்னையனை நியமிக்க ஓபிஎஸ் விரும்புவதாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த பதவிக்கு பொருத்தமானவர் என இபிஎஸ் கருதுவதாகவும் அதனை சார்ந்து விவாதங்கள் நடந்து முடிந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.