ஈபிஎஸ் கோட்டைக்குள் செல்லும் சசிகலா...! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி
அதிமுகவில் சசிகலாவை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வரும் நிலையில், சசிகலா சேலம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்திக்க உள்ளார்.
அதிமுகவில் சசிகலா?
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக இரண்டாக உடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற அனைத்து தேர்தலிலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது. எனவே இந்த தோல்விக்கு இரட்டை தலைமை தான் காரணம் என்றும் சசிகலாவை அதிமுகவின் தலைமையேற்க வேண்டும் என அதிமுகவின் ஒரு பிரிவினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நினைவேற்றினர். இதன் காரணமாக அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில் சசிகலாவை சந்தித்த காரணத்தால் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் தற்போது அமைதி காத்துவருகின்றனர்.
சேலத்திற்குள் செல்லும் சசிகலா
இந்தநிலையில் சசிகலா கடந்த வாரம் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை சந்தித்தார். அப்போது அண்ணா,எம்ஜிஆர். ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஏராளமான தொண்டர்கள் அதிமுக கொடியோடு சசிகலாவிற்கு வரவேற்பு கொடுத்தனர். இந்தநிலையில் சசிகலா தனது கணவர் எம்.நடராஜனின் நினைவு நாளையொட்டி வருகிற 20 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள விளார் கிராமத்திற்கு சென்று நடராஜனின் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளார். இதனையடுத்து தனது இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை தஞ்சையில் இருந்து தொடங்குகிறார். முதல் மாவட்டமாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக உள்ள சேலத்திற்கு செல்லவுள்ளார். கடந்த சட்டமன்றதேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் 11 தொகுதியுள்ள சேலம் மாவட்டத்தில் 10 தொகுதியில் அதிமுக கூட்டணி வெற்றிபெற்றது. இந்தநிலையில் தனது தென்மாவட்ட சுற்றுப்பயணத்தின் முதற்கட்டத்தை முடித்துள்ள சசிகலா கொங்கு மாவட்டமான சேலத்திற்கு செல்லவுள்ளார். சேலத்தில் எடப்பாடி, மேட்டூர், உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் சசிகலா அதிமுக நிர்வாகிகளை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து தொண்டர்களை சந்தித்து பேசும் வகையில் சுற்றுப்பயணம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விரைவில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சேலம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாக இருப்பதால் அந்த பகுதிக்குள் செல்லும் சசிகலாவிற்கு தொண்டர்கள் வரவேற்பு கொடுப்பார்களா? அல்லது எதிர்ப்பு தெரிவிப்பார்களா என்று அதிமுக நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தநிலையில் அதிமுகவில் தற்போது எழுந்துள்ள பிரச்சனைகள் தொடர்பாக முடிவெடுக்க விரைவில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் காரசார விவாதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.