கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஒ.பி.எஸ். முதலமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செயலாளராக ஜெயலலிதாவின் தோழி, சசிகலா பொறுப்பேற்றார்.

இதைதொடர்ந்து கடந்த 5ம் தேதி போயஸ் கார்டனில் அதிமுக அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. அப்போது ஒ.பன்னீர்செல்வம், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், சசிகலாவை சட்டமன்ற அதிமுக தலைவராக முன்மொழிந்தார். இதையொட்டி சசிகலாவை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தனர். இன்று அல்லது 9ம் தேதி சசிகலா, முதலமைச்சராக பெறுப்பேற்பார் என எதிர் பார்க்கப்பட்டது.

ஆனால் திடீரென, இன்று முதல்வராக பொறுப்பேற்பார் என அதிறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நேற்று தீவிரமாக அதிமுக அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் செய்தனர். இந்த பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் நடக்கும் என உறுதி செய்யப்பட்டது.

அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று காலை சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்து, தீவிரப்படுத்தினர்.

இதையொட்டி கமிஷனர் ஜார்ஜ், மேற்கண்ட பகுதியில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். சென்னை பல்கலைக்கழக வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகள் இரவு முழுவதும் தீவிரமாக நடைபெற்றன. மண்டபம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

கவர்னர் வித்யாசாகர் ராவ், சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்வதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சென்னை வருவார். அதன்பின், சசிகலா கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, சட்டசபை அதிமுக கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மான நகலை வழங்கி, தனக்கு முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்யும்படி, அழைப்பார் என பேசப்பட்டது.

இதை தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் தமிழகத்தின் 13வது முதலமைச்சராக சசிகலா பதவி ஏற்பார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் கவர்னர் இன்று சென்னைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் இருந்த கவர்னர் அங்கிருந்தபடியே சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, மும்பைக்கு சென்றார். 

கவர்னர் வித்யாசாகர் ராவ், சென்னைக்கு வருவதைஒத்திவைத்ததால், சசிகலா முதல்வராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா பதவியேற்பு விழா எப்போது நடக்கும்என்பதில் குழப்பம் நிலவுகிறது.