சென்னை வந்தார் சசிகலா...! தடபுடலான வரவேற்பு..!! அலைமோதும் தொண்டர்கள் கூட்டம்...!!!
சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்து 5 நாள் பரோலில் வெளியே வந்த சசிகலா சென்னை வந்தடைந்தார்.
உடல்நலக் குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனைக் காண, 15 நாட்கள் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் சசிகலா. கடுமையான நிபந்தனைகளுடன் அவருக்கு 5 நாட்கள் பரோல் வழங்கியுள்ளது பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம்.
ஆனாலும் சசிகலாவுக்கு கடும் நிபந்தனைகளுடனே பரோல் அளித்துள்ளது சிறை நிர்வாகம். அதாவது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடராஜனை மட்டுமே சசிகலா சந்திக்க வேண்டும். பரோல் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட வீட்டில் மட்டுமே இருக்க வேண்டும். வீட்டிலோ மருத்துவமனையிலோ வேறு யாரையுமே சந்திக்கக்கூடாது. அரசியல் நடவடிக்கைகளிலோ கட்சி நடவடிக்கைகளிலோ ஈடுபடக்கூடாது. ஊடகங்களை சந்திக்கவோ எந்த கருத்தும் தெரிவிக்கவோ கூடாது. ஆகிய நிபந்தனைகளுடன் பெங்களூரில் இருந்து கிளம்பினார் சசிகலா.
சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலாவை டிடிவி தினகரன், திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். மேலும், விமானம் மூலம் வருவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட சசிகலா சாலைவழி மார்க்கமாகவே சென்னைக்கு புறப்பட்டார்.
அவரை 50 க்கும் மேற்பட்ட கார்களில் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர். மாலை 3 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பிய சசிகலா தற்போது சென்னை வந்தடைந்துள்ளார். அவரை தொண்டர்கள் தடபுடலாக வரவேற்றனர்.