சசிகலா கேட்கும் 40 சீட்... பாஜக மூலம் அதிமுகவில் ஐக்கியமாகத் துடிக்கும் டி.டி.வி.தினகரன்..!
40 சீட் கொடுத்தால் போதும். அதிமுகவுடன் இணைக்கக் கூட வேண்டாம். கூட்டணி வைத்தால் போதும் என்று இறங்கி வந்துள்ளாராம்.
டி.டி.வி.தினகரன் சில தொழில் அதிபர்கள் மூலம் பாஜக மேலிடத்திடம் தொடர்பு கொண்டு அதிமுகவுடன் கட்சியை இணைக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது சசிகலாவுக்கு பொதுச் செயலாளர் பதவியை கொடுத்தால் கட்சியை இணைப்பதாகவும், பாஜக சொல்படி நடப்பதாகவும் உறுதியளித்துள்ளார். இதற்கு சில பாஜக தலைவர்கள் சம்மதித்துள்ளனர். அமித்ஷா மட்டும் அமைதி காத்து வந்தார். பதில் கொடுக்கவில்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அதிமுகவை கைப்பற்ற திட்டம் தீட்டினர். அதன்படி எடப்பாடி பழனிச்சாமியுடன் தனது ஆதரவு தலைவர்கள் சிலர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார் சசிகலா.
அப்போது தனது ஆதரவாளர்களுக்கு 40 சீட் கொடுத்தால் போதும். அமமுகவை இணைத்து விடுகிறேன். மோதலில் ஈடுபட்ட தலைவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்று கூறினாராம். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதிக்கவில்லை. சசிகலாவிடம் கட்சியை கொடுத்தால், அது சாதி சங்கமாக மாறிவிடும். அமமுகவும் தற்போது சாதி சங்கமாகத்தான் உள்ளது.
தென் மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே வாக்களிக்கக் கூடிய கட்சியாகத்தான் உள்ளது. இதனால் கட்சியை எந்தக் காரணம் கொண்டும் சசிகலாவிடம் கொடுக்க முடியாது, 40 சீட்டும் தர முடியாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அமித்ஷாவிடம் சில தொழில் அதிபர்கள் மூலம் பேச்சுவார்த்தையை நடத்தி வரும் சசிகலா, ’’40 சீட் கொடுத்தால் போதும். அதிமுகவுடன் இணைக்கக் கூட வேண்டாம். கூட்டணி வைத்தால் போதும் என்று இறங்கி வந்துள்ளாராம். இதற்காக பாஜக வேட்பாளர்களுக்கான மொத்த தேர்தல் செலவையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம். கட்சி நிதியாகவும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் டெல்லியில் இருந்து மறுப்பு ஏதும் வரவில்லை. சாதகமான பதிலும் வரவில்லை. மறுக்கவில்லை என்பதால் தனக்கான கதவு திறந்தே இருப்பதாகத்தான் டி.டி.வி.தினகரனும், சசிகலாவும் கருதுகின்றனர். இதனால், டெல்லியில் உள்ள தொழில் அதிபர்கள் மூலம் கூட்டணிக்கு தீவிரமாக முயன்று வருகின்றனர். இதனால்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் வேலைகளை தொடங்கி செய்யும் நேரத்தில் அமமுக மட்டும் அமைதி காத்து வருகிறது.