100 நாட்களுக்கு பிறகு சசிகலாவை காணலாம்!! – காணொளியில் 12 மணிக்கு ஆஜர்...
சொத்து குவிப்பு வழக்கில் 4 1/2 ஆண்டு சிறை தண்டனை 10 கோடி ரூபாய் அபராதத்தோடு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் அதிமுக பொது செயலாளர் சசிகலா.
100 நாட்களை கடந்து பெங்களூரு சிறைவாசம் சென்று கொண்டிருக்கும் நிலையில் விவேக், டாக்டர் வெங்கடேஷ் மற்றும் சில உறவினர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தினந்தோறும் சசிகலாவை சந்தித்து வருகின்றனர்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களான பழனியப்பன், செந்தில் பாலாஜி கதிர்காமு உள்ளிட்டோர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரும் நேற்று சிறையில் சந்தித்து சசிகலாவுடன் ஆலோசனை நடத்தி விட்டு வந்தனர்.
சொத்து குவிப்பு வழக்கு மட்டுமின்றி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு வழக்குகள் வாட்டி வதைத்து வருகின்றன.
அதில் மிக சிக்கலான வழக்குதான் அந்நிய செலாவணி மோசடி வழக்காகும்.இவ்வழக்கில் சசிகலாவின் அக்காள் மகன்கள் தினகரன் பாஸ்கரன் சுதாகரன் ஆகியோர் சிக்கியுள்ளனர்.
இந்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யபட்ட நிலையில் சசிகலா விடுதலை செய்யப்படவில்லை.
கடந்த வாரம் சிறையிலிருந்து வெளிவந்த தினகரனும் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுதாகரனும் இந்த வழக்கின் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
இந்த நிலையில் சசிகலா உடனான விசாரணை இன்று வருகிறது. அதற்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்படிருந்தது.
பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சென்னைக்கு அழைத்து வருவதால் பல சிக்கல்கள் இருப்பதாலும் பாதுகாப்பு காரணமாக காணொளியில் விசாரித்து கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை மதியம் 12 மணியளவில் எழும்பூர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் காணொளி காட்சி மூலமாக ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிக்கிறார்.