சார்பட்டா; மெய்சிலிர்த்துபோன உதய்...! ரஞ்சித்துக்கு செம பாராட்டு..
இரும்புப் பெண்மணி இந்திராவை எவ்வளவு துணிவுடன் எதிர்த்தார், என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் உடன்பிறப்புகளாக வலம் வரும் பசுபதி உள்ளிட்டோர், "தமிழகத்தை தலைவர் பார்த்துக்கொள்வார்" "தலைவரால் தான் தமிழகம் பாதுகாப்பாக இருக்கிறது" என அருமை பெருமைகளை கூறுகின்ற வசனங்கள் படம் பார்க்கும் திராவிட பற்றாளர்களை, உடன் பிறப்புகளை உணர்ச்சிவயப்பட வைப்பதாக இருக்கிறது
.
சார்பட்டா திரைப்படத்தில் 70 களின் அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகமும், தலைவர் கலைஞரும் எதிர்கொண்ட விதத்தையும், கதையோடு காட்சிப்படுத்தி இருப்பது சிறப்புக்குரியது என சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ந்து பாராட்டியுள்ளார்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யாவை கதாநாயகனாகக் கொண்டு வெளியாகியுள்ளது சார்பட்டா பரம்பரை திரைப்படம். இது முழுக்க முழுக்க சென்னையின் மண்ணின் மைந்தர்களின் வீர விளையாட்டான பாக்ஸிங்கை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.1965-70 காலகட்டங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விட்டுச்சென்ற குத்துச்சண்டை எந்த அளவிற்கு சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்க்கையோடு ஒன்றி இருந்தது, எந்த அளவிற்கு குத்துச்சண்டை போட்டிகளுக்காக தங்களை அவர்கள் அர்ப்பணித்துக் கொண்டனர் என்பதை மையமாகக் கொண்டு திரைக்கதையை நகர்த்தியுள்ளார் ரஞ்சித். எல்லோர்க்கும் எல்லாம் என்ற கோட்பாட்டில் நீதிக் கட்சியை தொடங்கி அதிலிருந்து அரசியல் இயக்கமாக உருவெடுத்த திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசியல் வீச்சு அப்படத்தில் இடையிடையே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வட சென்னை மக்கள் எந்த அளவிற்கு அரசியல் கொள்கையில் தீவிரமானவர்களாகவும், குத்துச்சண்டை போட்டியில் வைராக்கியமானவர்களாகவும் இருந்தார்கள் என்பதை ரஞ்சித் சார்பட்டா பரம்பரையில் பதிவு செய்துள்ளார்.அப்போதைய பிரதமர் இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசர பிரகடனம் செய்து, எதிர்க்கட்சித் தலைவர்களையும், மாநில அரசுகளை எவ்வாறு ஒடுக்கியது என்பது குறித்தும், அதை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு. கருணாநிதி எவ்வளவு தீரத்துடன் போராடினார் என்பது குறித்தும் சார்பட்டாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வட சென்னை திமுகவில் கோட்டையாக இருந்தது என்பதையும், குத்துச்சண்டை வாத்தியார்கள் திராவிட இயக்கத்தின் கொள்கை குன்றாக வலம் வந்தார்கள் என்பதையும் அதில் ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி கேரக்டர் மூலம அச்சு பிசகாமல் சொல்லியிருக்கிறார் இயக்குனர். பசுபதியின் பேச்சு நடிப்பு திராவிட இயக்கத்தின் அரசியல் வீச்சை பதிவு துல்லியமாக பதிவு செய்துள்ளது. எமர்ஜென்சியின் போது திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, அதில் பல திமுக முன்னணி தலைவர்கள் கைதுவது என முழுக்க முழுக்க திமுகவின் போராட்ட கால வரலாறு துல்லியமாக அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சார்பட்டா பரம்பரை பாக்ஸ்சர்கள் உதயசூரியன் சின்னம் பொறித்த ஜெர்சி அணிந்து கெத்தாக மேடையேறும்போது மிரட்டலான பின்னணி இசை அமைத்து பார்வையாளர்களை பரவசப் படுத்தி இருக்கிறார் இயக்குனர். எமர்ஜென்சியை எதிர்ப்பதில் திமுக தலைவர் அப்போது எவ்வளவு உறுதியாக இருந்தார், இரும்புப் பெண்மணி இந்திராவை எவ்வளவு துணிவுடன் எதிர்த்தார், என்பதை உணர்த்தும் வகையில் படத்தின் உடன்பிறப்புகளாக வலம் வரும் பசுபதி உள்ளிட்டோர், "தமிழகத்தை தலைவர் பார்த்துக்கொள்வார்" "தலைவரால் தான் தமிழகம் பாதுகாப்பாக இருக்கிறது" என அருமை பெருமைகளை கூறுகின்ற வசனங்கள் படம் பார்க்கும் திராவிட பற்றாளர்களை, உடன் பிறப்புகளை உணர்ச்சிவயப்பட வைப்பதாக இருக்கிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது அதில் கபிலனாக அசத்தியுள்ளார் நண்பர் ஆர்யா, கழகத்துக்காரர் ரங்கன் வாத்தியாராக வரும் பசுபதி சார், டான்சிங் ரோஸ், வேம்புலி என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ளார் நண்பர் இயக்குனர் பீம்ஜிக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.