பாஜகவுக்கு தாவிய தேசியவாத காங்கிரஸ் பெண் வேட்பாளர் ! மகாராஷ்ட்ரா கூத்து !!
மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் திடீரென பாஜகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் வரும் 21-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் இடையே ஒரு கூட்டணியும். பாஜக – சிவசேனா இடையே ஒரு கூட்டணியும் உருவாகி களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் காயிஜ் தொகுதியில் நமீதா முண்டடா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நமீதா இன்று திடீரென தேசியவாத காங்கிரசில் இருந்து விலகி, மத்திய அமைச்சர் பங்கஜ முண்டே முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வேட்பாளர் விலகியது தேசியவாத காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
வரும் தேர்தலில் அதே காயிஜ் தொகுதியில் பாஜக வேட்பாளராக நமீதா அறிவிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமீதா கடந்த 2014ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பாஜக வேட்பாளர் சங்கீதாவிடம் தோல்வியடைந்தார். மகாராஷ்டிராவில் 1995ல் பாஜக-சிவசேனா கூட்டணி அரசில் மந்திரியாக இருந்த விமல் முண்டடாவின் மருமகள் தான் நமீதா என்பது குறிப்பிடத்தக்கது.