27 வருடமாக சிறையில் வாடும் மகன்... 72 வயதான தாயின் உருக்கமான கடிதம்!!
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என சமீபத்தில் உச்ச் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக சிறையில் இந்த 7 பேரும் தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை தொடந்து தமிழக அரசும் இந்த 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. ஆளுனரும் இந்த 7 பேரின் விடுதல் தொடர்பான எல்லா விவரங்களையும் மத்திய உள் துறை அமைச்சரகத்திற்கு அனுப்பி கொடுத்திருக்கிறார். இனி அங்கிருந்து வரும் உத்தரவை பொறுத்து தான் இந்த 7 பேரின் விடுதலை தீர்மானிக்கப்படும்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சாந்தனின் தாய் தில்லையம்பலம் மகேஸ்வரி மத்திய மற்றும் மாநில அரசுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். இலங்கையில் வசித்து வரும் அவர் இந்த கடிதத்தினை இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், தமிழக முதலமைச்சர் மற்றும் சட்ட அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
தன் மகன் சாந்தனின் விடுதலையை வேண்டி 72 வயதான மகேஸ்வரி இந்த கடிதத்தினை எழுதி இருக்கிறார். அதில் 27 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனை காணமுடியாமல் தவித்து வருவதை தெரிவித்த அவர், ஒவ்வொரு முறை சாந்தனுக்கு தூக்கு தண்டனை என அறிவிக்கப்படும் போதும் தானும் தூக்குமேடைக்கு ஏறி இறங்கியதாக தெரிவித்திருக்கிறார். சாந்தனின் தகப்பன் தில்லையம்பலமும் 5 ஆண்டுகளுக்கு முன்னர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
அதன் பிறகு தனித்து வாழ்ந்து வரும் மகேஸ்வரிக்கு இப்போது முதுமை காரணமாக கண்பார்வை குறைபாடு ஏற்பட்டிருக்கிறது. இதனால் தளர்ந்து போயிருக்கும் அவர் தன்னுடைய கடைசிகாலத்தில் தனக்கு சேவை புரியவாவது மகன் வேண்டும் என மன்றாடி கேட்டிருக்கிறார்.
சாந்தன் சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருக்கும் இந்த 27 ஆண்டுகளும் தான் நரகவேதனை அனுபவித்ததாக குறிப்பிட்டிருக்கும் அவர் , சாந்தனின் விடுதலைக்காக அந்த கடிதத்தில் வேண்டி கேட்டிருக்கிறார்.