முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதை வரும் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதை வரும் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய இருப்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் கோட்டை வெளியில் உள்ள பெரியார் பூங்காவில் 75 ஆவது சுதந்திர திருநாள் அமுத பெருவிழா புகைப்பட கண்காட்சியை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் துவங்கி வைத்தார். இக்கண்காட்சி இன்று முதல் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகிறது. இந்தக் கண்காட்சி காலை முதல் இரவு வரையில் நடக்கும் என்றும் இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் வரலாறுகள் அவர்களின் சுதந்திரத்திற்கான பங்குகள் மற்றும் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதில் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதல் சுதந்திர போராட்டம் வேலூரில் துவங்கிய சிப்பாய் புரட்சிதான். ஆனால், வடநாட்டு வரலாற்று ஆசிரியர் வேலூர் சிப்பாய் புரட்சியை வரலாற்றில் இடம் பெறாமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். அப்பெருமை தமிழகத்திற்கு செல்ல கூடாது என குறியாக இருந்தனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜமதக்னி என்பவர் பெரும் தியாகி சுதந்திரத்திற்காக தன்னை முழுவதும் அர்பணித்தவர். இவர் பல்வேறு நூல்களை சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து சமஸ்கிருதத்திற்கும் மொழி பெயர்த்தவர். அவர் மகளுடன் சிறை சென்றார். மகள் அஞ்சலை அம்மாளுடன் சிறையிலே இருந்தவர்.

இப்படிப்பட்டவர்களின் தியாகங்களை மறக்க முடியாது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. கர்நாடக அரசு டிரிபுனல் உத்தரவையும் மதிக்கவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிக்கவில்லை. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. நாங்கள் அணை கட்ட கூடாது என உறுதியாக உள்ளோம். மேகதாது அணைக்கட்டுவது சாத்தியமில்லை. முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கண்காணிப்பு குழுவுக்கு என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதை வரும் வழக்கு விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நாங்கள் மனுதாக்கல் செய்ய இருக்கிறோம். தமிழகத்தில் விரைவில் மணல் குவாரிகள் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
