Samaiyar Aasaram rape case verdict today jothpur court

பாலியல் பலாத்கார குற்றத்தில் சிக்கியுள்ள சாமியார் ஆசாராம் வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அவருக்கு தூக்கு தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மாநிலம், ஆமதாபாதைச் சேர்ந்தவர், ஆசாராம் பாபு, 75. வயதான இவர், பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்தார். ஆசாராம் பாபுவும், அவரது மகன், நாராயண் சாயும், தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, குஜராத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், போலீசில் புகார் அளித்தனர்.

உத்தர பிரதேசம் மாநிலம், ஷாஜஹான்பூர் பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுமியும், ஆசிரமத்தில் தங்கி படித்து வந்த போது, ஆசாராம் பாபு, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் அளித்திருந்தார்.

ஆசாராம் பாபுவை, 2013ல், போலீசார் கைது செய்தனர். தற்போது அவர், ராஜஸ்தானில் உள்ள, ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், ஷாஜஹான்பூர் சிறுமி வழக்கில், நான்கு ஆண்டுகளாக விசாரணை நடந்தது. சமீபத்தில், இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படும்' என, நீதிபதி தெரிவித்திருந்தார்.

மேலும், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க, ஆசாராம் அடைக்கப்பட்டுள்ள, ஜோத்பூர் சிறையிலேயே, தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். இதையடுத்து, ஜோத்பூர் சிறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில், ஆசாரம் பாபுவுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளதால், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்பவர் களுக்கு துாக்கு தண்டனை அளிக்கும் வகையில், அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சாமியாருக்கு, துாக்கு தண்டனை கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.