சமக வேட்பாளர் வேட்புமனு நிராகரிப்பு - சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர் போலீசார்...
ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட சமக வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனுதாக்கலை தேர்தல் அதிகாரி நிராகரித்தமையால் சமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெற்று வந்தது.
இதில் சசிகலா தரப்பில், டி.டி.வி. தினகரனும், ஒ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும், தீபா பேரவை சார்பில் தீபாவும், திமுக சார்பில் மருதுகணேஷும், தேமுதிக சார்பில் மதிவாணனும், சமக சார்பில் அந்தோணி சேவியரும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 127 பேர் மனுதாக்கல் செய்தனர்.
இதற்கான மனு பரிசீலனை ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் சமக வேட்பாளர் அந்தோணி சேவியரின் மனு நிராகரிக்கப்பட்டது. மேலும் சமக மாற்று வேட்பாளர் மனுவும் நிராகரிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமத்துவ மக்கள் கட்சியினர் ஏராளமானோர் ஆர்.கே.நகர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.