மகிழ்ச்சியில் கேரள நர்ஸ்கள்…. தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு கேரளத்தில் வரலாறு காணாத ஊதிய உயர்வு
இந்தியாவில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை கேரள அரசு பிறப்பித்துள்ளது. இதற்காக கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு செவிலியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு செயலாளர் தலைமையிலான குழு நாட்டிலுள்ள செவிலியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.20ஆயிரம் என நிர்ணயம் செய்து அறிவித்தது.
இதனனை அமல்படுத்தக் கோரி நடந்த ஆண்டு ஜுலையில் கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அப்போது முதலமைச்சர் பினராயி விஜயன்ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையே இந்த ஊதிய உயர்வுக்கு அடிப்படையாக அமைந்தது.
ஊதிய உயர்வு மார்ச்31 முதல் அமலாகும் என அரசு உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில் தனியார் மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதன்படி உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட வலியுறுத்திசெவ்வாயன்று நேற்று முதல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக தனியார்மருத்துவமனை ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தனியார் மருத்துவமனை ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செவிலியர்களுக்கு ரூ.12 ஆயிரத்து200 வழங்கப்பட்டு வந்தது. இது தற்போது ரூ.20ஆயிரமாகவும், மூத்த செவிலியர்களுக்குரூ.22ஆயிரத்து 680 என உயர்த்தப் பட்டுள்ளது.
பிசியோதெராபிஸ்ட்டுக்கு ரூ.7825லிருந்து ரூ.16400ஆகவும், மருந்தாளுநர்களுக்கு ரூ.8725லிருந்து ரூ.20000 ஆகவும், உயிரி ஆய்வாளர்களுக்கு ரூ.9600லிருந்து 22090 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் படுக்கை எண்ணிக்கைகளைப் பொறுத்து ஊதியம் கூடுதலாகும். இந்த ஊதிய உயர்வு தனியார் மருத்துவமனையின் இதர பொது தொழிலாளர்களுக்கும் பொருந்தும். அதன்படி உதவியாளரின் சம்பளம் ரூ.7775லிருந்து ரூ.16000ஆகவும், மின்சார பணியாளர்களுக்கு ரூ.8100லிருந்து ரூ.17230ஆகவும், நிர்வாகமேலாளர் போன்ற நிர்வாக அதிகாரிகளின் சம்பளம் ரூ.10,000லிருந்து 23200ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரலாறு காணாத சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு செவிலியர் சங்கங்களான யுஎன்ஏ, ஐஎன்ஏ ஆகியவை வரவேற்பு தெரிவித்துள்ளன.