ஜாக்பாட் அடித்த ஜனாதிபதி, துணை ஜனாதிபதி…. சம்பளத்தை மூன்று மடங்கு உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிப்பு….
மத்திய பட்ஜெட்டில் ஜனாதிபதி சம்பளம் ரூ. 5 லட்சமாகவும், துணை ஜனாதிபதி சம்பளம், ரூ.4 லட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் . பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.,க்கள் சம்பளம் 5 ஆண்டிற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும் உயர் அதிகாரிகளை விட குறைவான சம்பளத்தையே பெற்று வருகின்றனர். மத்திய அரசு 7வது சம்பள கமிஷனை அமல்படுத்திய பின்னர், மத்திய அரசின் தலைமை செயலாளர் உட்பட உயர் அதிகாரிகளின் சம்பளம் உயர்த்தப்பட்டது.
ஆனால், நாட்டின் முதல் குடிமகன் என்று அழைக்கப்படும் ஜனாதிபதியின் சம்பளம் உயர் அதிகாரிகளின் சம்பளத்தை விட குறைவாக இருந்தது.முப்படைகளின் தலைமை தளபதியாக விளங்கும் ஜனாதிபதியின் ஊதியம், முப்படை தளபதிகளின் ஊதியத்தை விட குறைவாகவே இருந்தது.
இது குறித்து சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் சம்பளத்தை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்தது.
ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, கவர்னரின் சம்பளத்தை உயர்த்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சட்ட முன்மொழிவு தயாரித்து, ஓராண்டுக்கு முன்பு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்த சட்ட முன்மொழிவில், ஜனாதிபதியின் சம்பளத்தை ரூ.5 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் சம்பளத்தை ரூ.3.5 லட்சமாகவும், கவர்னர்கள் சம்பளத்தை ரூ.3 லட்சமாகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
தற்போது ஜனாதிபதியின் மாதச் சம்பளம் ரூ.1.50 லட்சமாகவும், துணை ஜனாதிபதியின் சம்பளம் ரூ.1.25 லட்சமாகவும், கவர்னரின் சம்பளம் ரூ.1.10 லட்சமாகவும் உள்ளது.
ஆனால், 7வது சம்பள கமிஷனை மத்திய அரசு அமல்படுத்திய பிறகு, மத்திய அமைச்சரவை செயலாளரின் சம்பளம் ரூ.2.5 லட்சமாகவும், மத்திய அரசு செயலாளரின் சம்பளம் ரூ.2.25 லட்சமாகவும் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று மத்திய பட்ஜெட்டை அறிவித்த மத்திய நிதி அமைச்சர், ஜனாதிபதி சம்பளம் ரூ. 5 லட்சமாகவும், துணை ஜனாதிபதி சம்பளம், ரூ.4 லட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் . பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.,க்கள் சம்பளம் 5 ஆண்டிற்கு ஒரு முறை மாற்றியமைக்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.