Asianet News TamilAsianet News Tamil

கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை.! வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வாகங்கள், சொத்து விவரங்கள் தொடர்பான விஷயங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார்.
 

sadhguru congratulates tamil nadu government historic step to assure transparency in temple administration
Author
Chennai, First Published May 20, 2021, 5:00 PM IST

தமிழ்நாட்டில் அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் முறையான பராமரிப்பின்றியும் பூஜைகள் நடத்தப்படாமல் சிதைந்து போயிருப்பதை சுட்டிக்காட்டி, தமிழக கோவில்களின் நிர்வாகத்தை இந்து மதத்தினரிடமே ஒப்படைக்க வேண்டும் என்று சத்குரு ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆகிய இருவரிடமுமே இதுதொடர்பான கோரிக்கையை விடுத்திருந்தார். தேர்தலில் திமுக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிலையில், அறநிலையத்துறை அமைச்சராக சேகர் பாபு நியமிக்கப்பட்டார்.

கோவில் நிர்வாகங்களை முறைப்படுத்தவும், கோவில் சொத்து விவரங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் அமைச்சர் சேகர் பாபு நடவடிக்கை எடுத்துள்ளார். அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ள வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணைய பதிவேற்றம் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆலோசனை செய்தார்.

கோயில் நிர்வாகம், அலுவலர்கள் பற்றிய விவரங்கள், கோவில் திருப்பணி, விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்ட அமைச்சர் சேகர் பாபு,  கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். 

மேலும், கோவில்களின் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கோவில் சொத்துகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டார். 

கோவில் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய தமிழக அரசு எடுத்த நடவடிக்கையை மனதார பாராட்டியுள்ளார் சத்குரு. டுவிட்டரில் தமிழக அரசுக்கு சத்குரு பாராட்டு தெரிவித்து இட்ட பதிவில், அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள் என்று சத்குரு பதிவிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios