சபரிமலைக்கு செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் பெண்கள் எல்லாம் நக்சலைட்டுகள்… எச்.ராஜாதான் இப்படி சொல்கிறார் ?
லட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிக்கும் பெண்கள் எல்லாம் நக்சலைட்டுகள் என்றும், இந்து மதத்துக்கு எதிரானவர்கள் என்றும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பலரும் ஆதரவும், இந்து அமைப்புகள் பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் சபரிமலையில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானாது. கோவிலுக்குள் செல்ல முயன்ற பெண்களை தடுத்து போராட்டக்காரர்கள் காலில் விழுந்து முறையிட்டு திருப்பி அனுப்பினர். மேலும், பெண் காவலர்கள் அங்கு பணியாற்றவும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், சபரிமலை விவகாரத்தில் தேவசம் போர்டு எந்த வித முடிவும் எடுக்கலாம் என தேவசம் போர்டுக்கு கேரள அரசு முழு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக நெல்லையில் நடைபெற்று வரும் புஷ்கரணி விழாவில் பங்கேற்க வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சபரி மலையில் போலீசாரே பக்தர்கள் மீது கல்வீசித் தாக்குவதாக கூறினார். சபரிமலைக்கு செல்ல முயன்ற லிபி என்ற பெண் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே இல்லை என்றும், பெண் நக்சலைட்டுக்ள் தான் சபரி மலை செல்ல வேண்டும் என பிடிவாதம் பிடிப்பதாக குற்றம்சாட்டினார்.