நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரிய உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. காமலைக்கண்ணால் பார்ப்பது போல ஒருதலைப் பட்சமாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கூறினார்.

தமிழக சட்ட சபையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பியனுப்பியது குறித்து கடந்த 5ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது மீண்டும் சட்டசபையை கூட்டி நீட்விலக்கு மசோதாவை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்புவது என முடிவு எடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 8-ந்தேதி சட்டசபை சிறப்பு கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் அனுப்பிய அறிக்கையை முழுவதுமாக அரங்கிற்கு படித்துக் காட்டினார். ‘நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு பரிந்துரையை அடிப்படையாக கொண்டு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளில் சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடைபெறுவது இது 5வது முறையாகும். சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. 

இதன்மூலம் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு மாணவர்கள் விலக்கு பெற மசோதா வழிவகை செய்யும். பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் தமிழக மாணவர்கள் சேர மசோதா வழிவகை செய்கிறது. மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பான ஆளுநரின் கடிதத்தை சட்டப்பேரவையில் சபாநாயகர் வாசித்தார். அப்போது, நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் ஏற்புடையதாக இல்லை என்று கூறினார். 

நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது என்றும் வசதி படைத்தவர்களுக்கு சாதகமானது என்றும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. முக்கிய பாடங்களில் மாணவர் திறனை சோதிப்பதை தவிர்த்து அனைத்து வகை அறிவு என்ற பெயரில் வினோதமான சோதனை முறையை நீட் அறிமுகம் செய்துள்ளது.

நீட் தேர்வு மாணவர்களுக்கு உரிய தகுதிக்கு அங்கீகாரம் இல்லை. உயர்மட்ட குழுவின் அறிக்கையை ஆளுனர் ஒருதலைப்பட்சமாக அணுகியுள்ளார். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க தாமதம் ஆனதால் அதுகுறித்து பொதுவெளியில் விவாதிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. இயன்ற அளவில் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆனால் 142 நாட்கள் கழித்து மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா? இதுசரிதானா ?

சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது உகந்ததா என்பதை சம்பந்தப்படாதவர்கள் உணர வேண்டும். எனது பணி, கடமையில் இருந்து கடுகு அளவும் விலக மாட்டேன் என்று குறிப்பிட்ட அவர், சபாநாயகர் கட்சி சார்பற்று செயல்பட வேண்டும் என்பதை நான் அறிவேன். என் தலைவர் கலைஞர், மு.க.ஸ்டாலின் சொல்லிக்கொடுத்த பாடம் நினைவில் இருக்கிறது. ஆளுநரை சட்டப்பேரவையில் விமர்சிக்கக்கூடாது என்று கலைஞர் இருந்தபோது பேரவை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

உயிரியல் , வேதியியல், இயற்பியலுக்கு மட்டுமே பாடங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை நியாயப்படுத்தும் காரணங்களை அடுக்கி இருக்கிறார் ஆளுநர் என்றும் சபாநாயகர் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரிய உயர்மட்டக்குழுவின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. காமலைக்கண்ணால் பார்ப்பது போல ஒருதலைப் பட்சமாக உள்ளது என ஆளுநர் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கூறினார்.