முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு குறித்து, முகநூல் மூலம் அவதூறு பரப்பிய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு குறித்து முகநூலில் வதந்தி பரப்பிய துத்துக்குடி மளிகைக்கடைக்காரரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி அனுமதிக்கப்படட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் திவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையொட்டி, அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பூஜை, பரிகாரங்கள், யாகங்கள் வளர்த்து, முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பற்றி விசாரித்து செல்கின்றனர்.
இந்நிலையில் விஷமிகள் பலர், முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து, முகநூல் மூலம் அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களை, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து முகநூல் மூலம் அவதூறு பரப்பியதாக தூத்துக்குடி விவேகானந்தர் நகரை சேர்ந்த மளிகை கடைக்கார் சகாயம் என்பவரை, சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரை சென்னைக்கு கொண்டு வருகின்றனர்.
அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பி இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது, 8வது நபர் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
