ஆர்எஸ்எஸ் தலைவர் மதுரை வருகை..! வரவேற்க தயாரான மதுரை மாநகராட்சி..! கண்கள் சிவந்த ஸ்டாலின்..!
மதுரை எம்பி., சு.வெங்கடேசன் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு திமுக அடிபணிந்துவிட்டது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
தமிழகத்தில் நான்கு நாள் பயணமாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரை வந்துள்ள நிலையில் அதனை மையமாக வைத்து எழுந்துள்ள சர்ச்சைகள் தேசிய அளவில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழகத்தில் எப்போதுமே திமுக – அதிமுக எனும் இரண்டு பெரிய கட்சிகளுக்கு இடையே தான் தேர்தல் தொடங்கி அனைத்திலும் மோதல்கள் இருக்கும். ஆனால் கடந்த நாடாளுமன்ற தேர்தல் முதலே பாஜகவையும் திமுக தனக்கு நேரெதிரில் நிறுத்தியுள்ளது. அதிமுகவை விமர்சிப்பதை காட்டிலும் மோடி, பாஜக போன்றோரை எதிர்ப்பதில் ஸ்டாலின் தீவிரம் காட்டி வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சிஅமைத்த பிறகு முதல் முறையாக தமிழகத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வர உள்ளார்.
மதுரை சத்யசாய் நகரில் கட்டப்பட்டுள்ள சாய் பாபா ஆலய திறப்பு விழா மட்டுமின்றி ஏராளமான விழாக்கள், நிகழ்ச்சிகளில் மோகன் பகவத் பங்கேற்க இருக்கிறார். இதற்காகவே நான்கு நாள் பயணமாக அவர் மதுரை வருகிறார். இதனை அடுத்து மதுரை மாநகர் முழுவதுமே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் தொடங்கி அவர் தங்க உள்ள இடங்கள் வரை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோகன் பகவத்தை வரவேற்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிள் ஏற்பாடுகளையும் பலமாக செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார்.
அந்த சுற்றறிக்கை தான் தற்போது விவகாரமாகியுள்ளது. அதாவது மோகன் பகவத் மதுரை வர உள்ளதால் விமான நிலையம் முதல் அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் எங்கெங்கு நடைபெறுகிறது என்பதை அறிந்து சாலைகளை சீரமைத்தல், தெரு விளக்குகளை பராமரித்தல், சாலைகளை சுத்தமாக வைத்திடல் போன்ற பணிகளை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். அத்தோடு மோகன் பகவத் பயணிக்கும் சாலைகளில் அவர் பயணத்தை முடிக்கும் வரை சாலைகளை செப்பனிடும் பணிகளில் ஈடுபட்டு இடையூறு செய்யக்கூடாது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
பொதுவாக குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர், ஆளுநர் போன்ற அரசியல் அமைப்பு பதவிகளில் இருப்பவர்களின் வருகையின் போது தான் இது போன்ற சுற்றறிக்கை மற்றும் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும். ஆனால் அப்படி எந்த பதவியிலும் இல்லாத மோகன் பகவத் வருகைக்காக ஏன் மாநகராட்சி இப்படி ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கேள்விகள் எழுந்தன. அதிலும் மதுரை எம்பி., சு.வெங்கடேசன் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டு மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தார். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு திமுக அடிபணிந்துவிட்டது என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
மதுரை செல்லூரில் ஆர்எஸ்எஸ் பேரணியை துவக்கி வைக்க இருந்த அப்போதைய அமைச்சர் செல்லூர் ராஜூவை திமுகவினர் கடுமையாக விமர்சித்தனர். ஆனால் இப்போது மாநகராட்சி சார்பில் ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை செய்வது எந்த சட்டத்தின் அடிப்படையில் என அதிமுகவினர் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இதனால் விஷயம் பெரிதாவதை உணர்ந்து உடனடியாக மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை கேட்டு முகம் சிவந்த ஸ்டாலின், யாரை கேட்டு இப்படி ஒரு ஏற்பாடு என கொதித்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக மதுரை மாநகராட்சி ஆணையர் ஒரு விளக்கம் அளித்தார். அதன்படி இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் நபர் வருகையை முன்னிட்டு எப்போதும் செய்யப்படும் ஏற்பாடுகள் தான் இவை, ஆனால் உதவி ஆணையர் மேலதிகாரிகளோடு கலந்து ஆலோசிக்காமல் இவ்வாறு செய்துவிட்டதாகவும் அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவும் ஆணையர் தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே மோகன் பகவத்தை வரவேற்க ஏற்பாடுகளை செய்யுமாறு சுற்றறிக்கை அனுப்பிய உதவி ஆணையர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.