RSS case file against Rahul Gandhi Seetharam Yechuri

கர்நாடகாவில் மூத்த பத்திரிகையாளரும், மதவாதிகளுக்கும் எதிராக குரல் கொடுத்த கவுரிலங்கேஷ் கொலை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது ஆர்.எஸ்.எஸ். தொண்டவர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெங்களூரில் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கடந்த 6-ந்தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதவாதிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்த கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இதில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கவுரி லங்கேஷ் கொலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பேசியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆர்.எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்தவரும், வழக்கறிஞருமான திஹிருத்மான்ஜோஷி என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, யெச்சூரிமீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இது குறித்து ஜோஷி கூறுகையில், “ ஆர்.எஸ். எஸ். அமைப்பு குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு அக்டோபர் 22ந்தேதி விசாரணைக்கு எடுக்கப்படலாம்’’ எனத் தெரிவித்தார்.

அவர் அளித்த புகாரில், “ பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக எந்த விதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல், போலீஸ் அதிகாரிகள் எந்தவிதமான அறிக்கையும் வெளியிடாமல் இருக்கும் போது பொறுப்பான அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது அவதூறு பரப்புகிறார்கள்.

மக்களின் பார்வையில் அமைப்பை சிறுமைப்படுத்தி தோற்றத்தை சிதைக்க முயல்கிறார்கள். இது திட்டமிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தோற்றத்தை சிதைக்கும் முயற்சியாகும். இதுபோன்ற கருத்துக்களால் ஆர்.எஸ். எஸ். அமைப்பைச் சேர்ந்த நான் மக்களிடத்தில் செல்ல முடியாமல் அசிங்கப்படுகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.